கூட்டணியே வேண்டாம்.. கழற்றிவிட்ட அதிமுக.. கதிகலங்கிய கம்யூனிஸ்டுகள் தீவிர ஆலோசனை!!
சென்னை: அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளை திடீரென அக்கட்சி கழற்றிவிட்டது. இதனால் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போன இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று தீவிர ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் அதிமுக தொடக்கம் முதல் தனித்துப் போட்டி என்று கூறிவந்தது. பின்னர் ராஜ்யசபா தேர்தல்களில் அடுத்தடுத்து இடதுசாரிகளுக்கு ஒரு இடம் கொடுத்து ஆதரவு கொடுத்தது அதிமுக.
பின்னர் கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து அதிமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றிருப்பதாக ஜெயலலிதாவே அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ந் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்றார் ஜெயலலிதா.
மூன்றாவது அணியில் அதிமுக
பின்னர் பிப்ரவரி 5-ந் தேதி இடதுசாரிகள் டெல்லியில் கூட்டிய 11 கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்து கொண்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியன்று தமிழகம், புதுவையில் 40 தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார். அப்போது இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களுக்கான தொகுதிகள் இறுதியான பின்னர் தமது கட்சி வேட்பாளர்கள் அந்த தொகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்படுவர் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தலா 4 தொகுதிகள் தேவை
இதனிடையே அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவை சந்தித்து பேசிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் தங்களுக்கு தலா 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பட்டியல் கொடுத்தனர். இதுபற்றி அதிமுக- இடதுசாரித் தலைவர்கள் ஆலோசித்தனர்.
ஒன்றுதான் ஒதுக்க முடியும்
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஏனெனில் அதிமுக தரப்பில் இடதுசாரிகளுக்கு தலா ஒரு தொகுதிதான் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுவிட்டது. அதுவும் ஜெயலலிதா பிரசாரத்துக்கு செல்லும் மார்ச் 2-ந் தேதிக்கு முன்னதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியது.
பிடிவாதமாக இருந்த கட்சிகள்
இதற்கு இடதுசாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதாவோ தமது சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார். அதிமுகவின் பிரசாரத்தை அனைத்து இடங்களிலும் இடதுசாரிகள் புறக்கணித்தனர்.
உங்களோட கூட்டணியே வேண்டாம்..
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடதுசாரி தலைவர்களை சந்தித்த அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர், நாங்களே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டுக் கொள்கிறோம். உங்களுடன் கூட்டணியே இல்லை.. என்று முகத்தில் அறைந்தது போல் அறிவித்துவிட்டனர்.
அதிர்ச்சியில் உறைந்த இடதுசாரிகள்
இதனால் இரண்டு இடதுசாரி கட்சித் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து கடந்த 2 நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்தனர். இறுதியாக 'அதிமுகவுடனான தொகுதி உடன்பாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று அறிவித்தார்.
தீவிர ஆலோசனை
இதைத் தொடர்ந்து அதிமுக -இடதுசாரிகள் உறவு முறிவுக்கு வந்தது உறுதியானது. பின்னர் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் முடிவு எதுவும் சொல்லவில்லை.
தா.பா..
இந்த ஆலோசனையில் துரத்திவிட்டாலும் அதிமுக அணியில் இருப்போம் என்றுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தா. பாண்டியன் கூறியதாக தெரிகிறது.
திமுக பக்கம் போகும் மார்க்சிஸ்ட்?
ஆனால் மார்க்சிஸ்டுகள் கூட்டணி அமைப்பது பற்றிய் சாத்தியங்களை மார்க்சிஸ்ட் கட்சி விவாதித்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இடதுசாரிகளுக்கு இப்படி ஒரு அவமானம் தேவைதானா? என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து