மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏவுக்கு அரிவாள் வெட்டு: அதிமுகவினர் மூவர் கைது!!
மானாமதுரை: மானாமதுரை எம்.எல்.ஏ அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரிவாளால் வெட்டப்பட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவைச் சேர்ந்த குணசேகரன்.
கடந்த 2013ம் ஆண்டு மானாமதுரையில் பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில், அதிமுக அவைத்தலைவர் தெய்வம் என்பவரது வீடும் அகற்றப்பட்டது. இதில் எம்.எல்.ஏ. குணசேகரன் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படவில்லை என தெய்வத்தின் மகன் யோகேஸ்வரன் ஆத்திரத்துடன் இருந்தார்.
சனிக்கிழமை மாலை 7 மணியளவில் அதிமுக பிரமுகர் சோமன் என்பவரின் பாரத் கேஸ் ஏஜன்சி நிறுவனத்தில் எம்.எல்.ஏ. குணசேகரன், சோமன் மற்றும் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த யோகேஸ்வரன் (27) மற்றும் ஐந்து பேர் எம்.எல்.ஏ. வுடன் தகராறு செய்தனர். அப்போது மின்சாரம் தடைபடவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எம்.எல்.ஏவை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க முயன்ற சோமன் மற்றும் ஆறுமுகத்திற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் விழுந்த எம்.எல்.ஏ.வை மானாமதுரை அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எம்.எல்.ஏ.வை வெட்டியது குறித்து ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் தகராறில் ஈடுபட்டனர்.
இதனிடையே படுகாயமடைந்த குணசேகரன் முதலுதவிக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யோகேஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக குணசேகரனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே எம்.எல்.ஏவை வெட்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.