இந்தியாவிலேயே அறிவுக்கூர்மை மிக்க தலைவர் கருணாநிதி.. 94 வயது நண்பரை வாழ்த்திய 95 வயது அன்பழகன்!
அகில இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல மிகச்சிறந்த தலைவர் இல்லை என்று பேராசிரியர் அன்பழகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: நேரு, அண்ணாவிற்குப் பிறகு அகில இந்தியாவிலேயே அறிவுக்கூர்மை மிக்க தலைவர் கருணாநிதி என்று பேராசிரியர் அன்பழகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சட்டசபை வைரவிழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, எம்.பி டெரிக் ஓ பிரையன், மஜீத் மேமன் உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசினர்.
தேசிய தலைவர்கள் வாழ்த்தி பேசிய பின்னர் கருணாநிதியுடன் அரசியலில் தொடர்ந்து நண்பரும் திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
94 வயதாகும் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் 95 வயதான பேராசிரியர் அன்பழகன் பேசியதுதான் ஹைலைட்.
பெரியார் காலம் தொடங்கி அரசியலில் தங்களின் மலரும் நினைவுகளை மேடையில் பேசினார். இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதியைப் போல ஒரு தலைவரை பார்த்ததேயில்லை என்றார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல தலைவர் இல்லை என்றார்.
நேரு, அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய அறிவுக்கூர்மை கொண்ட தலைவர் கருணாநிதி. அண்ணாவை விட மிகப்பெரிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்றார்.
95 வயதானாலும் நண்பர், தலைவர் கருணாநிதியைப் பற்றி பேசிய போது சற்றே நா தழுதழுக்க பேசி முடித்தார் பேராசிரியர் அன்பழகன்.