தமிழர்கள் கொலை விவகாரத்தில் ஆளும் ‘பினாமி’ அரசு அலட்சியம்: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டது என கூறப்படும் நிலையில், தொடர்ந்து தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத் தக்க செயல் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
'' திருப்பதி வனப் பகுதிகளில் மரம் வெட்டிய 20 தொழிலாளிகள் சிறப்பு அதிரடிப் படையால் சுட்டு கொல்லப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்தது.
முதலில் இறந்த அந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். செம்மர கட்டை கடத்துவோரால் இந்த ஏழை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.மர கடத்தல் சட்டவிரோதமானது அது தடுக்கப்பட வேண்டும். அதற்காக தற்காப்பு என்ற அடிப்படையில் கூட அளவுக்கு அதிகமான பலப் பிரயோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆந்திர காவல்துறையின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த மனிதநேயமற்ற நடவடிக்கை அந்த தொழிலாளிகள் தங்களை நீதிமன்றம் மூலம் தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் நிராகரித்துவிட்டது. ஆந்திர அரசு தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விட்டது என்பது தான் என் வேதனை.
திருப்பதி வனப் பகுதிகளில் மரம் வெட்டிய 20 தொழிலாளிகள் சிறப்பு அதிரடிப் படையால் சுட்டு கொல்லப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்...
Posted by M. K. Stalin on Wednesday, April 8, 2015
இது எதிர்பாராமல் நடந்த மோதல் அல்ல என்பதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி படுகொலைகள் என்றும் செய்திகள் வருகின்றன. இதனால் தமிழக ஆந்திர எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுதாக தகவல்கள் வந்தாலும் செயல்படாத இந்த பினாமி அரசு இந்த விவகாரத்தில் மிகவும் அலட்சியமான நிலையை கையாள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தேவையற்ற முறையில் நடந்த இந்த கொத்து கொத்தான கொலை குறித்து, பணியில் உள்ள நீதிபதி தலைமையில் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் திமுக வின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்'' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.