அப்பல்லோ பிள்ளையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம்.. ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது எப்போ?
அப்பல்லோவில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானதால் அதிமுகவினர் ஜெயலலிதாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
சென்னை : அப்பல்லோ மருத்துவமனைவளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலில், இன்று காலை 6 மணிமுதல் 7 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 47 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படுக்கையில் இருந்தபடி, சிகிச்சை பெற்றுள்ளதால், கை, கால்களை அசைக்க, பிசியோதெரபி சிகிச்சை தரப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த மாதமே திட்டமிட்டிருந்தது. முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது எப்படி என்று மருத்துவமனை நிர்வாகம் யோசிக்கவே, இதைப்பற்றி கேள்விப்பட்ட சசிகலா, நல்லகாரியத்தை நிறுத்த வேண்டாத் நீங்க கும்பாபிஷேகம் நடத்துங்கள் எனச்சொல்லி நிதியும் கொடுத்தாராம். இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும், அங்கிருந்து சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது கோவில் கும்பாபிஷேகமும் முடிந்து விட்டதால் ஜெயலலிதா வீடு திரும்புவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.