சென்னை: பேரம் பேசும் ஆட்டோ ஓட்டுனர்கள்; காற்றில் பறந்த அரசு உத்தரவு!
சென்னை: சென்னையில் புதிய மீட்டர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பொதுமக்களிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் பேரம் பேசும் நிலைதான் நீடிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை தீவிர சோதனை செய்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினரும் இப்போது கண்டும் காணாமலும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 25ம் புதிய கட்டண அட்டை அறிமுகப்படுத்திய அரசு, திருத்தப்பட்ட மீட்டர் பொருத்தவேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அளிக்கப்பட்ட காலக்கெடு நவம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இரண்டு மாதங்களுக்கு மேலும் அவகாசம் அளித்தும் ஆட்டோ ஓட்டுனர்கள் அதனை செயல்படுத்தாமல், பொதுமக்களிடம் இஷ்டத்துக்கு பணம் கேட்கிறார்கள். 20000 ஆட்டோக்கள் இன்னும் புதிய மீட்டரை பொருத்தாமலேயே சென்னை வீதிகளில் ஓடுகின்றன.
பேரம் பேசும் டிரைவர்கள்
குறிப்பாக, சென்னை கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள புதிய மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள், மீட்டர் கட்டணத்தை வசூலிப்பதே கிடையாது. கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு, காவலர்கள் முன்னிலையிலேயே பொதுமக்களிடம் கட்டணம் பேரம் நடக்கிறது. இதனை காவலர்களிடம் சொன்னால் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்கள்.
கூடுதல் வசூல்
அப்படியும், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், மீட்டருக்கு மேலே பத்து ரூபாய், இருபது ரூபாய் வரை போட்டுக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். கட்டண பேர கொள்ளையைவிட இது பரவாயில்லை என்ற நிலையில் பொதுமக்கள் மீட்டர் கட்டணத்தை விட கூடுதலாக பணம் கொடுத்து செல்கிறார்கள்.
ரயில்நிலையங்களில்
காவல்துறையினர் சாலைகளில் வரும் ஆட்டோக்களை கண்காணிப்பதை விட மக்கள் அதிகமாக வந்து செல்லும் அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சோதனை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாப்பூருக்கு வர 70 ரூபாய்தான் மீட்டர் கட்டணம் ஆகிறது. ஆனாலும் இருமடங்காக 150 ரூபாய்தான் வசூலிக்கின்றனர்.
கொள்ளை லாபம்
இங்குதான் மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களும், மீட்டர் பொருத்திய ஆட்டோக்களும் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவர்கள் மீட்டர் கட்டணத்தை வசூலிப்பது கிடையாது. பொதுமக்களிடம் பேரம் பேசி கொள்ளை லாபத்தை அடைந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்
டிரைவர்கள் தாக்குதல்
சென்னையில் இன்று மீட்டர் பொருத்தாத மூன்று ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றினர். இதனால், ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து, மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.