மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு - நெல்லையில் மோட்டர் ஓர்க்ஷாப்கள் மூடல்
நெல்லை: மத்திய அரசு புதிய சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறையை அமுல்படுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் அனைத்து மோட்டார் வாகன பழுது பார்க்கும் கடைகளும் ஒருநாள் மூடப்பட்டது
மத்திய அரசு சமீபத்தில் புதிய சாலை பாதுகாப்பு விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது. பழுது பார்க்கும் பணிமனைகளில் நவீன வசதிகள் இருக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு அனுமதி கிடையாது. மேலும் வாகனங்களுக்கு ஓரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே போட வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கையும், சிறை தண்டனையும் உறுதியாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
இது வாகன பழுதுபார்க்கும் கடைகளை நடத்துபவர்களை பாதிக்கும் என்பதால் இந்த சட்டத்தை அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி நெல்லை அனைத்து மோட்டார் தொழிலாளர் பாதுகாப்பு நல சங்கத்தினர் ஓருநாள் உண்ணாவிரதத்தில் இருந்தனர்.
நெல்லை ஜவஹர் மைதானததில் இதற்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், மத்திய அரசின் புதிய பாதுகாப்பு சட்டப்படி, நவீன வசதிகள் இல்லாத பணிமனைகளை நடத்த அனுமதி கிடையாது. அனைத்து வாகனங்களையும் டீலர்களிடமே பழுது பார்க்க வேண்டும். ஓரிஜினல் உதிரி பாகங்களை தவிர்த்து பிற கம்பெனிகளின் உதிரி பாகங்களை மாற்றினாலும், விற்பனை செய்தாலும் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இதில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் அம்சங்களை நீக்க வேண்டும்.
இந்த தொழில் செய்யும் பலர் அடிப்படை கல்வியோடு படிப்பை நிறுத்தி விட்டு இளம் வயதிலேயே இந்த தொழிலுக்கு வந்து விட்டனர். இதனால் பலர் இந்த தொழிலில் அனுபவம் வாயந்தவர்களாக உள்ளனர். இந்த சட்டத்தை அமுல்படுத்தினால் சிறிய மோட்டார் தொழிலாளர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்படும். இதனை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் சுமார் 4000 ஓர்க் ஷாப்புகள் இயங்கவில்லை என்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை பகுதியில் பெரும்பாலான பழுதுபார்க்கும் நிலையங்கள் மூடப்படடிருந்தன. இதனால் பலர் பஞசர் ஓட்டுவதற்காகவும், பிற உதிரி பாகங்கள் மாற்றுவதற்கும் மோட்டார் சைக்கிளை தள்ளியபடியே அலைந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.