ஸ்டேட் ஃபர்ஸ்ட், 100 சதவிகித தேர்ச்சி: இலஞ்சி பாரத் மான்டிசோரி பள்ளி சாதனை
தென்காசி: தென்காசி அருகே உள்ள இலஞ்சி பாரத் மான்டிசோரி மாணவி சுப்ரிதா பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் அந்த பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி அருகேயுள்ள இலஞ்சி பாரத் மான்டிசோரி பள்ளியில் 241 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி எம்.சுப்ரிதா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மேலும் இப்பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பெற்றுள்ளனர்.
கரூர்:
பத்தாம் வகுப்பு தேர்வில் பரணிபார்க் பள்ளி மாணவி மைதிலி கரூர் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கரூர் மாவட்டம் பரணி பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவி மைதிலி 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
பரணிபார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரிப்பிரியா மற்றும் டி.என்.பி.எல். பள்ளி மாணவி அபிவிஷா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடமும், கரூர் மாவட்டத்தில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளனர்.
மேலும் பரணிபார்க் பள்ளி மாணவி வைஷ்ணவி உள்பட 7 மாணவ, மாணவிகள் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மாணவ-மாணவியரின் பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
நூலகம்:
கரூர் மைய நூலகத்தில் உள்ள இணையதள பிரிவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண மாணவ-மாணவியருக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ, மாணவியர் நூலகத்திற்கு வந்து இன்று காலை முதல் தேர்வு முடிவுகளை இலவசமாக பார்த்து சென்றனர். மேலும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தன்டுபத்து அனிதா குமரன் பள்ளி மாணவி சந்தியா 499 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 456 மாணவர்கள், 12 ஆயிரத்து 473 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 929 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள்.
இதில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று தன்டுபத்து அனிதா குரமன் பள்ளி மாணவி சந்தியா மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதலிடம் பிடித்துள்ளார்.
தன்டுபத்து அனிதா குரமன் பள்ளி மாணவிகள் அஞ்சனா ஜோதி, கரிஷ்மா, தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணவி நிஷா, தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளி மாணவி பிரபா, கோவில்பட்டி ரவிலக்ரா பள்ளி மாணவி ஹரிணி ஆகியோர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மேலும் 14 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாடம் இடத்தை பிடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 24, 929 பேரில் 23 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 399 மாணவர்களும், 12 ஆயிரத்து 095 மாணவிகளும் அடக்கம். தூத்துக்குடி மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் 94. 22 ஆகும்.