குளறுபடிக்கு காரணம் நீலகிரி வேட்பாளரே- கோவை பாஜக நிர்வாகி அம்பலப்படுத்தினார்!
கோவை: நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வேண்டுமென்றே படிவங்களை தாமதமாக தாக்கல் செய்ததாகக் கோவை மாவட்ட பாஜக பொறுப்பாளர் ஜி.கே.எஸ். செல்வக்குமார் ஆதாரங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நீலகிரியில் பாஜக வேட்பாளரான குருமூர்த்தி கட்சி பொறுப்பாளரிடம் இருந்து அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான ஏ மற்றும் பி படிவங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனாலேயே அவரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்று கூறப்பட்டது.
அந்த அதிகாரப்பூர்வ கடிதங்களை கொண்டு வரும்போது விபத்து ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. பாரதிய ஜனதாவின் கோவை கோட்டப் பொறுப்பாளரான ஜி.கே.எஸ். செல்வக்குமார் இந்தப் படிவங்களை தாமதமாக வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் தவறு செய்தவர்களைக் கண்டறிய பாரதிய ஜனதா மூவர் விசாரணைக் குழுவை அமைத்தது. இந்நிலையில் கொடுக்கப்பட வேண்டிய படிவங்களை ஏப்ரல் 3-ம் தேதி வேட்பாளர் குருமூர்த்தியிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஒப்படைத்து விட்டதாகக் கூறி அதற்கான ஆதாரத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜி.கே.எஸ். செல்வக்குமார் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே உரிய கடிதம் கொடுக்கப்பட்டும் அதை வேட்புமனுத் தாக்கலின் போது வேண்டுமென்றே பாஜக வேட்பாளர் இணைக்காமல் விட்டார் என்று தெரிகிறது.இதன் பின்னணியில் 'என்ன' புகுந்து விளையாடியது என்பதையும் பாஜக விளக்கினால் நல்லது?