குடியுரிமை சட்டத்தை வைத்து வெற்று அரசியல்... எஸ்.வி.சேகர் விமர்சனம்
சென்னை: குடியுரிமை சட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் வெற்று அரசியல் செய்வதாக பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரை நியாயமான முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், ஒரு சிலர் எதிர்க்கட்சிகளின் வெற்று அரசியலை நம்பி எதிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்காக அங்கு முகாமிட்டு பரப்புரை மேற்கொண்டு வரும் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ளார். மேலும், டெல்லியை பொறுத்தவரை பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமோ அல்லது இரண்டு இடமோ தான் கிடைக்கக் கூடும் என்றும், பாஜக தான் இந்த முறை டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளார். பிரச்சாரத்துக்கு தாம் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் காங்கிரஸை வெறுப்பதை தன்னால் உணர முடிகிறது என்றும், அதனால் காங்கிரஸ் டெல்லியில் ஆட்சிக்கு வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார். பாஜகவும், மத்திய அரசும் செய்த நல்லதிட்டங்கள் தான் மக்கள் மனதில் உள்ளதாக கூறியுள்ளார்.
வால்க தமில்.. தமிழகத்திலிருந்து கொண்டு இதை விட தமிழை யாராலும் கேவலப்படுத்த முடியாது சேகர்ஜி!
இதனிடையே டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் தமிழக பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காயத்ரி ரகுராம், நமீதா, உள்ளிட்டோர் முகாமிட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் தரப்பிலும் குஷ்பூ, நக்மா போன்றோர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.