தூத்துக்குடியில் போலீஸார் மீது ஒரு வழக்குகூட போடாதது ஏன்?: பிருந்தா காரத் கேள்வி
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து அச்சுறுத்திவரும் போலீஸார் மீது ஒரு வழக்குகூட போடாதது ஏன் என பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சீருடை இல்லாமல் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் போலீஸார் மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படாதது ஏன் என மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தின்போது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவதைக் கண்டித்து தூத்துக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்தாலும் உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
ஸ்டெர்லைட் போராட்டம்
இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தூத்துக்குடியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்துக்கு இன்று திங்கள்கிழமை வருகை தந்தார். பின்னர், அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சீருடை அணியாமல்
இதையடுத்து, பிருந்தா காரத் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை விசாரணை என்ற பெயரில் சீருடை அணியாமல் போலீஸார் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து ஆண்களை கைது செய்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் கைது
இதனால், பொதுமக்கள் பயந்து குழந்தைகளுடன் ஊர்க் கோயிலின் முன்பாக உறங்குகிறோம் என பெண்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இரவு நேரங்களில் பொதுமக்களை கைது செய்வதற்கு காவல் துறைக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்பாவி மக்கள் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இப்படி அராஜகமாக செயல்படும் போலீசார் மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்பட்டாதது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
ஆலை விரிவாக்கம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த ஆலையின் விரிவாகத்திற்கு முக்கிய காரணம் மோடி அரசும், முந்தைய மத்திய ஆட்சியாளர்களும்தான். அதே போல, இதற்கு தற்போதைய அ.தி.மு.க., அரசும் தற்போதைய மத்திய அரசும்தான் காரணம்." என்று குற்றம் சாட்டினார்.
பிருந்தா காரத் பங்கேற்பு
செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்வத்துக்கு தமிழக அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.