ஆன்லைன் விற்பனையைத் துவக்கியது கோ-ஆப்டெக்ஸ்... இனி, வீட்டிலிருந்தபடியே வாங்கலாம்!
சென்னை: கோ-ஆப்டெக்ஸ் நிறுவன துணி ரகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் வசதியை சென்னையில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார்.
இதுவரை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்றே வாடிக்கையாளர்கள் தேவையான துணி ரகங்களை வாங்கி வருகின்றனர். அனைத்தும் கணினி மயமாக்கப் பட்டு வரும் சூழலில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல இணைய தளங்கள் இணையதளம் மூலம் தேவையானவற்றை வீட்டு வாசலுக்கே அனுப்பி வைக்கின்றன.
எனவே, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் தனது விற்பனையை பெருக்கும் நோக்கில் இணைய தள விற்பனையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன்படி, www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான துணி ரகங்களை பார்வையிட்டு, தேர்வு செய்யலாம். பின்னர், அதற்குரிய தொகையைச் செலுத்தி விட்டால், வாடிக்கையாளர் தேர்வு செய்த துணி வீட்டிற்கே அனுப்பி வைக்கப் படும்.
இந்த வசதியை சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

நலத்திட்ட உதவிகள்...
தமிழகத்தில் 2 லட்சத்து 54 ஆயிரம் நெசவாளர்கள், அவர்கள் குடும்பத்தாருக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. கைத்தறித் துணி வகைகளின் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய அளவில்...
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய விற்பனை இந்திய அளவில் வாடிக்கையாளர்களோடு கோ-ஆப்டெக்ஸ் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் நேரம் விரயமாவது தவிர்க்கப்படும்.

பரிசுக் கூப்பன்கள்...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பரிசுக் கூப்பன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தமிழகத்தில் உள்ள 20 கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களிலும் கொடுத்து தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்ள முடியும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அறிமுகம்...
முன்னதாக, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் பரிசுக் கூப்பன் திட்டம், பொங்கல் சிறப்பு விற்பனைக்காக பிளாக் பிரிண்ட் அச்சிடப்பட்ட "ஜெயகார்த்திகா' சேலைகள், ஆண்களுக்கான 100 சதவீத பட்டு, பருத்திச் சட்டைகள் ஆகியற்றை அமைச்சர் கோகுல இந்திரா அறிமுகப்படுத்தினார்.

விழாவில் பங்கேற்றவர்கள்...
இந்த விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த்துறையின் முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.வி.மனோகரன், மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications