இலவசங்கள், அன்பளிப்புகளால் காலண்டர், டைரி விற்பனை மந்தம்- வியாபாரிகள் சோகம்!
சென்னை: புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் காலண்டர் மற்றும் டைரி விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் காணப்படுகின்றனர்.
தீபாவளி என்றால் புதிய உடை, பட்டாசு, பலகாரங்கள் என்பது போல, புத்தாண்டு என்றாலே அனைவரது நினைவிலும் முதலில் வருவது காலண்டர், டைரி, கொண்டாட்டங்கள் போன்றவை தான்.
முன்பெல்லாம் புத்தாண்டு பிறக்கிறது என்றால் கடைகளுக்குச் சென்று தான் புதிய காலண்டர் வாங்க வேண்டும். ஆனால், தற்போது அப்படியில்லை கடைக்கு கடை விளம்பர நோக்கோடு இலவசமாக காலண்டர்கள் மற்றும் டைரிக்கள் வழங்கப் படுகின்றன.
தங்களது நிறுவனத்தின் பெயர் பொரித்த காலண்டர் மற்றும் டைரிக்களை இலவசமாக வழங்குவதன் மூலம் தங்களது வியாபாரத்தை அவர்கள் பெருக்கிக் கொள்கிறார்கள். ஆனால், காலண்டர் மற்றும் டைரி தயாரித்து விற்பதையே தொழிலாகக் கொண்ட வியாபாரிகள் தான் இதனால் பெரும் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விதவிதமான காலண்டர்கள், டைரிகள்...
கார்களில் வைக்கப்படும் சிறிய அளவு காலண்டர் முதல் வீடுகள், நிறுவனங்களில் தொங்க விடப்படும் பெரிய அளவிலான காலண்டர்கள் வரை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சுவாமி படங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், இயற்கைக் காட்சிகள், குழந்தைகள் படங்கள் அச்சடித்த தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் மற்றும் விதவிதமான வடிவங்களில் டைரிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
குறைந்த விலை...
தினசரி காலண்டர் ரூ.25 முதல் ரூ.300 வரையிலும், மாதாந்திர காலண்டர்கள் ரூ.10 முதல் ரூ.500 வரையிலும், டைரிகள் ரூ.15 முதல் ரூ.600 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை தான் மிகவும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
அன்பளிப்பு...
வணிக நிறுவனங்களைப் போலவே அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொது அமைப்புகள் சார்பில் தங்களது பெயரை குறிப்பிட்டு சொந்த செலவில் அச்சடித்த தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அன்பளிப்பாக விநியோகிக்கப்படுகின்றன. இதுவும் கடைகளில் காலண்டர்கள், டைரிகள் வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
செண்டிமெண்ட்...
குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மட்டுமே, கடைகளில் விலை கொடுத்து காலண்டர் வாங்கி வருகின்றனர். அவர்களும் குறிப்பிட்ட காலண்டர்களை வீடு, நிறுவனங்களில் தொங்க விடுவதுதான் ராசி என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளனர் என்றும், மேலும் சிலர் புத்தாண்டு பரிசாக வழங்க காலண்டர் மற்றும் டைரிகளை வாங்குவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வியாபாரம் பாதிப்பு...
அப்படிப் பட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் வாங்கும் பட்சத்தில் சென்னை, மதுரை, சிவகாசிக்கு சென்று மொத்தமாக வாங்கி விடுகின்றனர். இதனால், சிறு வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாம்.