போட்டியிட்ட அனைவரும் ஜூன் 17க்குள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.. தேர்தல் ஆணையம்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை வரும் ஜூன் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுகள், அவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்த நாள் முதல் கணக்கிடப்படுகிறது. இதில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகைக்கு ஆன செலவுகளும் சேர்க்கப்படும்.
பிரச்சாரம் முடிவடைந்த பின்னர், தேர்தல் நாள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளிலும் வேட்பாளர்களின் செலவு தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டது.
மனுதாக்கலில் இருந்து இதுவரை 3 முறை வேட்பாளர்களின் செலவு விபரத்தை ஆணையத்தின் செலவு கணக்கு பார்வையாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ள செலவு குறித்து விளக்கம் கேட்டு வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தேதியில் இருந்து, அடுத்த 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி, தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 19ம் தேதி எண்ணப்பட்டன. எனவே, அன்றிலிருந்து 30 நாட்கள் என்ற கணக்கில் வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 17-ந் தேதிக்குள் தங்களது செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மதிக்காமல், தங்களது செலவு கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.