சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு: சுஷ்மிதா சென் செப்.18-ல் கோர்ட்டில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சொகுசு கார் வாங்கியபோது வரி ஏய்ப்பு செய்த வழக்கில் வரும் செப் 18-இல் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-இல் மும்பையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மூலமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய 'லேண்ட்-க்ரூஸர்' கார் ஒன்றை ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் 2004 மாடல் என சென்னை துறைமுகத்தில் போலியாக கணக்கு காட்டி இறக்குமதி செய்தது மட்டுமல்லாமல், வரிஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு பிடித்தனர்.

இதுதொடர்பாக காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக, மும்பையைச் சேர்ந்த ஹரன் சோக்சே மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காரை வாங்கிய சுஷ்மிதா சென்னும் 5-ஆவது சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான 2-வது பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிய வந்ததை அடுத்து சுஷ்மிதா சென் ரூ.22 லட்சத்தை முறையாக செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சுஷ்மிதா சென்னிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று கோரியும் அவர் ஆஜராகாததால் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்தது.
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுஷ்மிதா சென் வழக்கு தொடர்ந்ததை அடுத்து எழும்பூர் நீதிமன்றத்தின் வாரண்ட் உத்தரவுக்கு கடந்த ஜூலை 19-ஆம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுஷ்மிதா சென் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 18-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பை அந்த பகுதி போலீஸார் வழங்க வேண்டும் என்றும் அன்றைய தினமே அவரிடம் சாட்சியம் பதிவு செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications