மூத்த 'கார்ட்டூனிஸ்ட்' கோபுலு காலமானார்
சென்னை: பிரபல ஓவியர் கோபுலு (வயது 91) சென்னையில் நேற்று காலமானார்.
தஞ்சாவூரில் பிறந்த கோபுலு என்கிற எஸ்.கோபாலன், தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர் ஆவார். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஓவியர் மாலியின் ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார்.
1945-ஆம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியராக பணியாற்றினார். அமரர் தேவனின் புதினங்கள், கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்' புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்தவர்.
மறைந்த பத்திரிகையாளர் சாவியின் "வாஷிங்டனில் திருமணம்' என்ற தொடருக்கு கேலிச் சித்திரங்களை வரைந்து புகழ் பெற்றார். 1991-ஆம் ஆண்டு ஓவியர் கோபுலுவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு காலமானார்.
மறைந்த கோபுலுவின் உடல் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதலாவது பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும்.