சென்னையில் அரசு குடியிருப்பை, அசால்ட்டாக வாடகைக்கு விட்ட மத்திய அரசு ஊழியர்கள்.. சிபிஐ வழக்குப்பதிவு
சென்னை கேகே நகரில் மத்திய அரசு ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான குடியிருப்பை முறைகேடாக வெளியாட்களுக்கு வாடகைக்குவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை கேகே நகரில் மத்திய அரசு ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான குடியிருப்பை முறைகேடாக வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. வீடு வாடகைக்கு கொடுத்த சம்பவத்தால் மத்திய அரசு ஊழியர்கள் 36 பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களின் வேலை பார்க்கும் நபர்களுக்கு மத்திய அரசின் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். அரசுக்கு சொந்தமான இந்த வீட்டை விற்பதோ, வாடகைக்கு விடுவதோ குற்றம் ஆகும். அதன்படி சென்னை கேகே நகரில் மத்திய பொதுப்பணி துறை ஊழியர்களுக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பொதுப்பணி துறையில் வேலை பார்க்கும் நபர்களின் குடும்பங்கள் மட்டுமே வசிக்க முடியும்.

இந்த நிலையில் சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவில் இந்த குடியிருப்பு குறித்து ரகசியமான குற்றச்சாட்டு ஒன்று கொடுக்கப்பட்டது. அதன்படி இந்தக் குடியிருப்பில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. மேலும் நிறைய ஊழியர்கள் வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடத்தில் வசிப்பதாக அதில் கூறப்பட்டது.
இதையடுத்து சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு இது குறித்து அந்த குடியிருப்பில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் மொத்தம் 16 வீடுகளில் மத்திய அரசில் பணிபுரியாத நபர்களின் குடும்பங்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அந்த முகவரியை வைத்து ஆதார், ரேஷன் போன்ற அரசு ஆவணங்களை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வீடுகளை வாடகைக்கு விட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பின் பராமரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் வெவ்வேறு பிரிவு அதிகாரிகள் என மொத்தம் 36 பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications