பெயர் சொல்லி அழைப்பதா? மாணவரை அடித்த ஆசிரியர்: மயங்கி விழுந்த மாணவர்
நெல்லை: நெல்லை அருகே தனியார் பள்ளியில் பெயர் சொல்லி அழைத்த மாணவரை ஆசிரியர் சராமரியாக தாக்கியதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லையை அடுத்து மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உடல் கல்வி ஆசிரியராக இருப்பவர் எடிசன். உக்கிரன்கோட்டை கீழ தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரேம்குமார். அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் பேசுவதை கண்காணிக்க வகுப்பு லீடரை ஆசிரியர் எடிசன் நியமித்தார்.
மாணவர்களை கண்காணித்த வகுப்பு லீடர் சிறிது நேரம் கழித்து மாணவர் பிரேம்குமாரிடம் சென்று ஆசிரியர் எடிசனிடம் ஒரு தகவல் கூறும்மாறு தெரிவித்தார். இதையடுத்து பிரேம்குமார் ஓய்வறைக்கு சென்று ஆசிரியரை சார் என்று கூப்பிட்டுள்ளார். அப்போது எடிசன் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரேம்குமார் கூப்பிட்டும் அவருக்கு கேட்கவில்லை. எனவே ஆசிரியரின் பெயரை சொல்லி எடிசன் சார் என்று பிரேம்குமார் கூப்பிட்டுள்ளான்.
ஆத்திரமடைந்த ஆசிரியர் எடிசன் என்று தன் பெயரை சொல்லி எப்படி கூப்பிடலாம் என்று கூறி பிரேம்குமாரை எட்டி உதைத்ததாகவும், சராமரியாக அடித்து உதைத்தாகவும் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரேம்குமாருக்கு அதிர்ச்சியில் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர் பிரேம்குமாரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மானூர் போலீசில் பிரேம்குமாரின் தந்தை விஜயகுமார் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் எடிசன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications