கழுத்தில் கயிறு போட்டு நாயை தூக்கிய தாம்பரம் நகராட்சி ஊழியர்கள்... வைரலான வீடியோவால் வழக்கு!
சென்னைக்கு அருகே கல்லூரி வளாகத்தில் இருந்து நாய் ஒன்றை சுருக்குக் கயிறு போட்டு ஈவு இரக்கமற்ற முறையில் இழுத்துச் சென்ற தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : நாய்களைத் துன்புறுத்திக் கொன்றதாக விஐடி பல்கலைக்கழகத்தின் மீதும், தாம்பரம் நகராட்சி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கீழ்க்கோட்டையூர் பகுதியில் உள்ள விஐடி பல்கலைகழக வளாகத்திற்குள் இரண்டு பேர் நாய் ஒன்றினை கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கருப்பு நிற நாய் ஒன்றை இரண்டு பேர் கயிறு கட்டி தரதரவென இழுத்து வருகின்றனர்.
உயிருக்கு பயந்து அந்த நாய் ஓலமிடுவதை கண்டுகொள்ளாமல் பிடி இழக்காமல், அந்த நாயை நகராட்சி ஊழியர்கள் இழுத்துச் செல்கின்றனர். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோவை விலங்குகள் நல ஆர்வலரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் கவனத்திற்கு வந்துள்ளது.

ப்ளூ கிராஸ் அமைப்பு புகார்
இதனையடுத்து அவர் வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாம் வில்லியம்ஸ், தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொடுமைப்படுத்தி பிடித்து சென்றனர்
நகராட்சி ஊழியர்கள் சுந்தரம், தேவா ஆகியோர் நாயை சித்ரவதை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்படாத கீழ்க்கோட்டையூரில் அத்துமீறிச் சென்று விஐடி பல்கலைகழகத்தினுள் புகுந்து 11 நாய்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பிடித்து சென்றதும் தெரியவந்தது.

ஊழியர்களுக்கு அனுபவம் இல்லை
இதில் ஒரு நாய் பரிதாபமாக இறந்து போனதாக கூறப்படுகிறது. மேலும் பிடித்து சென்ற 10 நாய்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. விலங்குகளை பிடித்து செல்லும் முறை கூட ஊழியர்களுக்கு தெரியவில்லையே என்று இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கேள்விக்குறியாகும் விலங்குகள் பாதுகாப்பு
கடந்த ஆண்டு மாடியில் இருந்து கல்லூரி மாணவர்கள் நாயை தூக்கி வீசிக் கொன்ற சம்பவத்தையடுத்து விலங்குகள் மீதான கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் நகராட்சி ஊழியர்களின் இந்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications