ஸ்டிரைக்கை கைவிடாத பஸ் ஊழியர்கள் மீது எஸ்மாவில் நடவடிக்கை... ஹைகோர்ட் உத்தரவு
போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாரய்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேருந்துகளை இயக்குவோரை தடுப்பவர்கள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை ஊடகங்களில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications