500, 1000 நோட்டுகள் ஒழிப்பு.. 2வது நாளாக சில்லறைக்காக அலையும் மக்கள்.. பால்கூட வாங்க முடியலை!
ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் இரண்டாவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு பற்றிய மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், 2வது நாளாக பொதுமக்கள் சில்லரை தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரவு பழைய ரூ.500, ரூ.1,000, நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் நேற்று நாடு முழுவதும் பெரும் சில்லறைப் பிரச்சினை ஏற்பட்டது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை கடைக்காரர்கள் வாங்கிக் கொள்ள மறுத்ததால், அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் திணறினர்.
சில்லறைப் பிரச்சினை...
ரூ. 100 மற்றும் சில்லறையாக பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலான வணிகர்கள் பொருட்களை வினியோகித்தனர். இதனால் மற்றவர்கள் கையில் காசிருந்தும், பொருட்களை வாங்க வழியில்லாமல் அவதிப்பட்டனர்.
நோ சொன்ன ஹோட்டல்கள்...
ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்து இருந்தவர்களால் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடவும் முடியவில்லை. அங்கு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்துவிட்டதால், கையில் பணம் இருந்தும் பசியை தீர்க்க முடியவில்லை. தாகத்தை தணிக்க தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினார்கள்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
ஷேர் ஆட்டோ, டவுன் பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் சில்லறைப் பிரச்சினையால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
2வது நாளாக...
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அந்த சில்லறைப் பிரச்சினை காலையிலேயே தொடங்கி விட்டதாக பலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். காரணம் நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்களால் தங்கள் வசம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலவில்லை.
பால் கூட நோ...
எனவே, காலையிலேயே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்றவர்கள் சில்லறைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். டீக்கடை உள்ளிட்ட சிறு கடைகளிலும், ஹோட்டல்களிலும் சில்லறைத் தர மறுப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மக்கள் கவலை...
இன்று வங்கிகள் செயல்படும் என்ற போதும், ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கூட்டமும் அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றும் இந்த சில்லறைப் பிரச்சினை நீடிக்கும் வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.