காவிரி: கோவையில் மத்திய அரசை கண்டித்து சிபிஎம் கட்சியினர் மறியல்-கைது
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை காந்திபுரத்தில் நேற்று மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலமாக கிளம்பி வந்த அக்கட்சியினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், வரைவு அறிக்கையினை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.