தமிழக கட்சிகளின் எதிர்ப்பை மதிக்காத மத்திய அரசு.. கீழடி அதிகாரி அமர்நாத் அசாமுக்கு மாற்றம்!
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கீழடி ஆகழ்வாராய்ச்சி பணி அதிகாரி அமர்நாத் அசாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை: அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கீழடி ஆகழ்வாராய்ச்சி பணி அதிகாரி அமர்நாத் அசாமுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ராம கிருஷ்ணா அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை மத்திய தொல்லியல்துறை உறுதி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வு பணி நடைபெற்று வந்தது. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் இப்பணி சிறப்புற நடைபெற்று வந்தன.
தமிழர்களின் 5000 ஆண்டுகள் பழையான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தன. முதலாமாண்டு 43 குழிகள் தோண்டப்பட்டதில் 1800 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இரண்டாமாண்டு 59 குழிகள் தோண்டப்பட்டதில் சுமார் 3800 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வின் மூலம், தமிழகத்தில் முதல்முறையாக நகர நாகரிகம் இருந்தற்கான ஆதாரமாக நிறைய கட்டிடங்கள் கிடைத்தன.

அமர்நாத் இடமாற்றம்
110 ஏக்கர் பரப்பளவு உள்ள தொல்லியல் மேட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டும் 102 அகழ்வாய்வுக் குழிகளில் சுமார் 5300 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதுவரை இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ராமகிருஷ்ணா அமர்நாத் திடீரென அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
அகழாய்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரியதாலேயே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்
ராமகிருஷ்ணா அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத்தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் அமர்நாத் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

பணியிட மாற்றம் உறுதி
இந்நிலையில் மக்களின் எதிர்ப்புக்கு நடுவே ராமகிருஷ்ணா அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை மத்திய தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழ் ஆர்வலர்களையும் அமைப்புகளையும் அதிர்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications