சந்திராவின் 'வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள்' கவிதை வெளியீடு - கரு பழனியப்பன் வாழ்த்து
நவீன எழுத்துலகின் முக்கிய எழுத்தாளரான சந்திரா தங்கராஜ் எழுதிய 'வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள்' என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.
பூனைகள் இல்லாத வீடு, அழகம்மா, காட்டின் பெருங்கனவு போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், நீங்கிச் செல்லும் பேரன்பு என்ற கவிதைத் தொகுதியையும் எழுதியுள்ளார் சந்திரா தங்கராஜ். அமீரிடம் உதவி, இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் விரைவில் படம் இயக்க உள்ளார்.
அவர் புதிதாக எழுதியுள்ள கவிதைத் தொகுப்பு 'வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள்'.
இந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடந்தது.
இயக்குநர்கள் கரு பழனியப்பன, ராம் ஆகியோர் தலைமை வகித்து புத்தகங்களை வெளியிட்டனர்.
இயக்குநர் ராம் பேசுகையில், "எல்லா இயக்குநர்களின் பின்னாலும் அதற்கு காரணமான ஒருவர் இருப்பார். நான் இயக்குநராகக் காரணம் சந்திராவின் கணவர் வீகே சுந்தர். கற்றது தமிழ் படத்தில் சந்திரா என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஒரு முறை லொகேஷன் பார்க்கப் போயிருந்தோம். அந்த இடம் கொஞ்சம் பிரச்சினைக்குரியதாக இருந்தது. எனவே சந்திராவை அழைத்துப் போக வேண்டாம் என முடிவு செய்து அவரிடம் சொன்னோம். உடனே அவர் சண்டைக்கே வந்துவிட்டார். 'என்னை ஒரு பொண்ணுங்கறதுக்காக என்னை விட்டுட்டுப் போவீங்களா.. பெண்களுக்கு அவங்களை காப்பாத்திக்க தெரியாதா?'ன்னு கேட்டாங்க.
அதுக்கப்புறம்தான் பெண் உதவி இயக்குநர்களையும் பணியில் வைத்துக் கொள்ளலாங்கற முடிவுக்கே வந்தேன்," என்றார்.
இயக்குநர் கரு பழனியப்பன் பேசுகையில், "இன்றைய கவிதைகளை வாசிப்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. காரணம் எண்பதுகளில் வெளியான கவிதைகளை ஓசை நயத்துடன் வாசித்துப் பழகிவிட்டன். இப்போது அது போல கவிதைகள் வருவதில்லை. ஆனால் சந்திராவின் கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்த பிறகுதான், 'கவிதைக்கு ஓசை மட்டும் முக்கியமில்லை... கருத்தின் ஆழம்தான் முக்கியம் எனத் தெரிந்து கொண்டேன்.
எனக்கு முன் பேசிய கவிஞர் நரன், ஆங்கிலேயர் காலத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டதாகவும், அதில் 90 சதவீத தமிழர்களுக்கு முத்தம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று தெரியவந்ததாகவும் கூறினார். இது உண்மையாக இருந்தால், அது ஒரு பெரிய படத்துக்கான கதைக் கரு. ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. காரணம், கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ தித்திக்கும் வாய்ச்சுவையும் என்று ஆண்டாள் பாடியிருக்கிறார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு. வாய்ச்சுவை என்பது முத்தம்தான்," என்றார்.
பட்டாம்பூச்சி பதிப்பகம் சார்பில் ரமேஷ்குமார் இந்த நூலை வெளியிட்டிருந்தார்.
கவிஞர்கள் வெய்யில், நரன், விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் ஜெயராணி தொகுத்து வழங்கினார்.