சென்னையில் 43 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: முதன்முறையாக தரம் பிரித்து கணக்கீடு
சென்னை: நேற்று முன்தினம் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து, சென்னையில் முதன்முறையாக 43 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் தரம்பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப் பட்டது. கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. தீபாவளி மற்றும் அதன் முந்தைய நாள் மட்டும் சிறிதளவு மழையளவு குறைந்திருந்தது. இதனால் இந்தாண்டு பட்டாசு விற்பனை பெரிதளவு பாதிக்கப் பட்டது.

இந்நிலையில், சென்னையில் 43 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப் பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் டன் குப்பைகள்...
15 மண்டலங்களை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இரு நாட்களில் மட்டும்...
இந்த அளவு பண்டிகை காலங்களில் சற்றுக் கூடுதலாக இருக்கும். அதன்படி, இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையின் இரு நாட்களில் மட்டும் 43 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள்...
ஏற்கனவே, தொடர் மழை பெய்து வரும் நிலையில் தெருக்கள் மற்றும் சாலைகளில் குப்பைகளைத் தேங்க விடாமல் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு நகரைத் தூய்மையாக்கி வருகின்றனர்.
முதன்முறையாக...
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் ஏற்படும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முதன்முறையாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாநகராட்சிகளையும் அறிவுறுத்தியது.
பட்டாசுக் கழிவுகள்...
அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினம், தீபாவளி பண்டிகையன்று அகற்றம் செய்யப்பட்ட குப்பைகள் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள ராசாயன தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு தரம் பிரிக்கப்பட்டன. இதில் 43 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கிடைத்தன.' எனத் தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவு பட்டாசுக் கழிவு...
மழை காரணமாக பட்டாசு விற்பனை கடந்த ஆண்டுகளை விட 50 சதவீதம் அளவுக்கு மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு குறைந்த அளவிலான பட்டாசு கழிவுகளே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications