சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உடைந்த “கண்ணாடி” – பயணிகள் பாதுகாப்பு?
உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று காலையில் மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, உடைமைகளைப் பரிசோதனை செய்யும் பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென்று உடைந்து, நொறுங்கி விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்தபடி ஓடினார்கள்.
பின்னர் அந்த பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. புதிய விமான நிலையம் கட்டப்பட்ட நாளில் இருந்து நடந்துள்ள 24 ஆவது விபத்துச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையின் ஸ்லாப்தான் அடிக்கடி உடைந்து விழும். இந்த நிலையில் தற்போது கண்ணாடியும் உடைந்து விழ ஆரம்பித்துள்ளது.
சென்னை விமான நிலையம் தனியார் மயமாக்கப்பட இருப்பதால் பராமரிப்பு பணிகள், உடைந்து விழும் பகுதிகளை சரி செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற விபத்துக்கள் கிட்டத்தட்ட தினசரி நடந்து கொண்டுள்ளது. பத்திரிக்கைகளும் செய்திகள் போட்டபடிதான் உள்ளன. ஆனால் அதைச் சரி செய்யத்தான் ஒருவருக்கும் மனம் இல்லை. ஒரு வேளை பெரிய விபத்து நடந்து, பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால்தான் இந்த அதிகாரிகளுக்கு இதயம் துடிக்குமோ என்னவோ...