சென்னை குண்டுவெடிப்பு: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க கெடுபிடி அதிகரிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை குண்டு வெடித்த சம்பவத்தையடுத்து திருப்பதி கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பஸ், ரயில் நிலையங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ராணுவம், ஆக்டோபஸ் கமாண்டோக்கள், ஆயுதப்படை போலீஸார், தேவஸ்தான கண்காணிப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் தங்கும் விடுதி, அன்னதான சத்திரங்கள், தலை முடி காணிக்கை செலுத்துமிடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
24 மணிநேரமும் துணை ராணுவத் தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி மலை அடிவாரத்தில் அனைத்து வாகனங்களும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிர சோதனை செய்த பின்னரே மலைக்கு அனுமதிக்கப் பட்டன.
இதே போன்று, திருச் சானூர் பத்மாவதி தாயார் கோவில், காணிப்பாக்கம் விநாயர் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், விஜயவாடா ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது 10 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. நெல்லூர் ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேஸால் பரபரப்பு ஏற்பட்டது.