மேக வெடிப்பு ஏற்பட்டதா? சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ கொட்டித் தீர்த்த மழை!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை இரவு கன மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், அண்ணாநகர், மணலி, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
பத்தே நிமிடங்களில் 4 செ.மீ மழை பொழிந்தது. மேகத்தில் வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியதை போல மக்கள் உணர்ந்தனர். அந்த அளவுக்கு வானத்திலிருந்து தண்ணீர் கொட்டியது.

சாதனை
சுமார் ஒரு மணி நேரத்தில் 7 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது. இவ்வருடத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை பொழிவு இதுதான் என்ற சாதனை படைத்துள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி
அண்ணாசாலை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை நின்றதும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மின்தடை
மழை ஆரம்பித்த பிறகு கே.கே.நகர், அசோக் பில்லர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட நகரின் சில இடங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

மின் விபத்து
பிராட்வே பகுதியில், மழையில் நடந்து சென்றபோது அறுந்துகிடந்த மின்சார ஒயரை மிதித்த இளைஞர் ஒருவர் பலியானார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மீத்துகுமார் சிங் என்று தெரியவந்துள்ளது. அவர் மணப்புரம் கோல்டு ஹவுஸ் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றியுள்ள்ார்.












Click it and Unblock the Notifications