சென்னை டான்பாஸ்கோ பள்ளி மாணவர் மரணம்- தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது
சென்னை டான்பாஸ்கோ பள்ளி மாணவர் மரணம் அடைந்த விவகாரத்தில் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: மாணவனை வெயிலில் வாத்து போல நடக்க வைத்து தண்டனை கொடுத்து மரணத்திற்கு காரணமாக இருந்த சென்னை டான்பாஸ்கோ பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் நரேந்தர் உயிரிழந்த விவகாரத்தில் இதற்குக் காரணமாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், தலைமை ஆசிரியர் அருள்சாமி ஆகியோருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர், அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரபாவை. இவர்களுக்கு ரேஷ்மா,18 என்ற மகளும், நரேந்தர்,15 என்ற மகனும் உள்ளனர்.
ரேஷ்மா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நரேந்தர், திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இறைவணக்கம் முடிந்து மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு திரும்பினர்.
வகுப்பறைக்கு வந்து அமர்ந்து இருந்த நரேந்தர், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நரேந்தரை உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.
ஆனால் நரேந்தர், சுயநினைவு இன்றி இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் நரேந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திரு.வி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தார்.
பள்ளிக்கு 10 நிமிடம் காலதாமதாக சென்ற மாணவரை, டக்வாக் எனப்படும் வாத்துபோல் முட்டி போட்டு செல்லும் தண்டனையை உடற்கல்வி ஆசிரியர் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது மயங்கி விழுந்த மாணவனை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றுள்ளனர். மாணவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டார். பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவன் ஜெயேந்தரின் உறவினர்கள் திருவிக நகர் பேருந்து பணிமனை முன்பு போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தலைமை ஆசிரியர் அருள்சாமி கைது செய்யப்பட்டார்.