உதவி செய்ய மதம் எதற்கு?; வெள்ள நிவாரணத்தில் களமிறங்கிய ஜெயின், சீக்கிய, கிருஸ்துவர்கள்
சென்னை: பெருமழையும்... பேரிடரை ஏற்படுத்திய வெள்ளமும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மக்களுக்கு துயரை ஏற்படுத்தியிருக்கிலாம், ஆனால் மனிதர்களுக்கு இடையே இருந்த மதம் என்ற சுவரை சுக்குநூறாக உடைத்து தூள் தூளாக்கியிருக்கிறது.
வெறித்தனமாய் வேட்டையாடிச் சென்ற வெள்ளத்தில் உடைமைகளை இழந்து சொந்த ஊரிலேயே அகதிகளாக சாலை ஓரங்களிலும், திக்கற்று திரியும் மக்களுக்கு ஜெயின் சமூகத்தினரும், மார்வாடிகளும், சீக்கியர்களும், கிருஸ்துவர்களும் எண்ணற்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவாலயங்களில் தங்க இடமளித்த கிருஸ்துவர்கள் இந்த ஆண்டு கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்து விட்டனர்.
குடும்பத்துடன் நிவாரணம்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருள்களை ஜெயின் சமூகத்தினர் வழங்கினர். இதோடு, 75 இளைஞர்களும், அவர்கள் குடும்பத்தாரும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என 16 மணி நேரம் நிவாரணப் பொருள்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை வேப்பேரி ஈ.வி.கே.எஸ். சம்பத் சாலையில் உள்ள சம்பவ்நாத் ஜெயின் கோயிலில் செயல்படும் ஸ்ரீ வேப்பேரி சுவேதாம்பர் மூர்த்திபூஜக் ஜெயின் சங்கத்தினர் வெள்ள நிவாரண முகாமில் உதவிப் பொருள்களை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வழங்கி வருகின்றனர். சங்கத் தலைவர் ரமேஷ் முத்தா, செயலர் விபின் ஜெயின் உள்ளிட்டோர் இதற்கான ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இளைஞர்களும் சேவைப்பணி
ஸ்ரீ சம்பவ்நாத் ஜெயின் மண்டலைச் சேர்ந்த 75 இளைஞர்களும், அவர்கள் குடும்பத்தாரும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நிவாரணப் பொருள்களை வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சங்கப் பிரதிநிதிகள் தேஜ்ராஜ் கோத்தாரி, பிரகாஷ் முக்தா ஆகியோர் ஒருங்கிணைப்பில் இந்த நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழிலதிபர்கள்
எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தொழிலதிபர்கள். வாட்ஸ் அப் மூலம் வெள்ள நிவாரணம் கேட்டு தகவலை பரப்பினோம். இதனால், அமெரிக்காவில் இருந்தும், மும்பை, புனே, சூரத், ஆமதாபாத், தில்லி ஆகிய இடங்களில் உள்ள ஜெயின் சமூகத்தினர் தங்களால் இயன்ற அளவில் பொருள்களை அனுப்பினர். இதைத் தொடர்ந்து, பொருள்களும் வந்த வண்ணம் உள்ளன.
ரூ.50 லட்சம் மருந்துகள்
மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப் பொருள்கள்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரமேஷ் பாப்னா, ரூ.30 லட்சத்துக்கு புத்தாடைகளையும், ஜெயின் சர்வதேச வர்த்தக சங்கத்தின் சார்பில் நிவாரணப் பொருள்களையும் வழங்கினர்.
மெடிசேல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு, விற்பனையகத்தின் நரேந்திர ஸ்ரீமால் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கினார். இந்த நிவாரணப் பொருள்களை 5 சரக்குப் பெட்டகங்களில் தீவுத்திடலில் உள்ள ராணுவ அலுவலக பொறுப்பாளர் கர்னல் தாஸிடம் ஏற்கெனவே வழங்கியுள்ளனர்.
இயல்பு நிலை திரும்பும்வரை சேவை
அரிசி மூட்டைகள், குடிநீர் பாட்டில்கள், பால் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களும், வீட்டு உபயோகத்துக்கு வழங்குகிறோம். தார்பாயும் கொசுவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஓடோமாஸ் ஆயில்மெண்ட் என அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர். பணத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நிவாரணப் பொருள்களை வழங்க முடிவு செய்துள்ள இவர்கள், இயல்பு நிலை திரும்பும் வரை அயராது பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.
பிராணிகளுக்கும் உணவு!
மஹாவீர் அஹிம்சையை மட்டும் போதிக்கவில்லை ஜீவகாருண்யத்தையும் போதித்துள்ளார். இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேற்கூரைகளில் பறவைகளுக்கு கேழ்வரகு, கம்பு, நவதானியங்களும் போடுகிறோம். மேலும் பிராணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்கவும், பாதுகாக்கவும் தேவையான அதற்குரிய அமைப்புகளை தொடர்பு கொண்டு அவர்களுக்கும் வேண்டிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம். இந்த நிவாரணப் பொருட்களை வழங்குவதில் இவ்வளவு தான் என்று இலக்கும் நிர்ணயிக்கவில்லை என்கின்றனர் சுரேஷ் மார்டியா, கிரண் ஜெயின், அகாஷ் கம்ளேஷ்.
கடலூர் புதுச்சேரியில் நிவாரணம்
புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இந்திய மார்வாடி இளைஞர் சங்கத்தினர் பல்வேறு நிவாரண உதவிகள் மற்றும் உணவு பொருள்களை கடந்த ஒரு வாரமாக வழங்கி வருகின்றனர். மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதி மக்களுக்கு அகில இந்திய மார்வாடிகள் இளைஞர் நலச் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில், தார்பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சீக்கியர்கள் நிவாரண உதவி
இதேபோல வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாரத்தை தொலைத்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடந்த ஒருவாரகாலமாக செய்து வருகின்றனர்.
கிருஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை நகரில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கைவிடுவது என கிறிஸ்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தென்னிந்திய திருச்சபையின் சென்னைப் பேராயம் சார்பில் அதன் கீழ் உள்ள அனைத்து திருச்சபைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சபைகள் அறிவிப்பு
சாண்டா கிளாஸ் எனும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடுவீடாக சென்று வாழ்த்துக்களைப் பரிமாறும் 'கேரல் ரவுண்ட்' நிகழ்ச்சியை பெரும்பாலான திருச்சபைகள், நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன.
நரிக்குறவர்கள் நிவாரணம்
வெள்ளத்தில் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால், ஏராளமானவர்கள் உறங்குவதற்கு பாய், போர்வை எதுவும் இன்றி தவித்து வருகின்றனர். எனவே நிவாரணமாக வழங்குபவர்கள் அத்தியாவசிய பொருட்களான பாய், போர்வை உள்ளிட்டவைகளையும், உணவு, குடிநீரையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் சென்னை, கடலூர், திருவள்ளூருக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அவிநாசியை சேர்ந்த நரிக்குறவர்கள் வெள்ள நிவாரணமாக 100 பாய்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
பரிதவித்த பார்வையற்றோருக்கு பாதுகாப்பு
மழை வெள்ளத்தில் சாதாரண மனிதர்களே அல்லாடிய நிலையில் மாற்றுத்திறனாளிகளின் நிலை பற்றி சொல்ல வேண்டுமா ?
கோடம்பாக்கம் லிபர்டியில் ஆதி திராவிடர் அரசினர் விடுதியில் தங்கிருந்த கண்பார்வையற்றவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த தொலைகாட்சி செய்தியாளர் ஒருவர்,நள்ளிரவு 2 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து இரவோடு இரவாக 11 நபர்கள் மீட்கப்பட்டு திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் ரோட்டிலுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இருந்து கடலூரில் நிவாரணம்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகர சேவைப்பிரிவின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்காக நிவாரணப்பொருட்கள் திரட்டப்பட்டது. மக்களுக்கு தேவையான அரிசி, மாவு, பருப்பு, பயிறு வகைகள், எண்ணெய், பிஸ்கட்கள் மற்றும் போர்வைகள் என பல நிவாரண பொருட்கள் கடலூர் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. ஜமாஅத்தின் ஊழியர்கள், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் ஊழியர்கள், மற்றும் வெல்ஃபேர் கட்சியின் தொண்டர்கள் என 20 நபர்கள் கொண்ட குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழங்கியது.