டெல்லியை போல் மெரினாவிலும் அரை நிர்வாண போராட்டம் கூடாது- அய்யாக்கண்ணுவுக்கு ஹைகோர்ட் உத்தரவு
டெல்லியை போல் மெரினாவிலும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்த கூடாது என்று அய்யாக்கண்ணுவுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: டெல்லியில் நடத்தியதுபோல் சென்னை மெரினாவிலும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்த கூடாது என்று விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி, விளை பொருளுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரை நிர்வாணமாக கோவணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய போது போலீஸார் அனுமதி அளிக்காததால் விரக்தி அடைந்த அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அணிந்திருந்த கோவணத்தையும் கழற்றி விட்டு ஓடினர். விவசாயிகளை இப்படி நடத்தப்படுவதை பார்த்து தமிழகமே மனம் வருந்தியது.

தமிழகத்தில் போராட்டங்கள்
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என கூறி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

அய்யாக்கண்ணு அனுமதி
இதில் விவசாய அமைப்புகளை சேர்ந்த அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினாவில் காவிரிக்காக 90 நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு அனுமதி கோரினார்.

எத்தனை நாள்
அந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி தர இயலாது. எத்தனை நாள் என்பதை தெரிவியுங்கள்.

பொதுமக்கள் வந்து செல்லும் இடம்
டெல்லியில் நடத்தியது போன்று அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட கூடாது. மெரினா கடற்கரை பொதுமக்கள் வரும் இடம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications