சாக்லேட்டே தான் வேணும்: சென்னையில் 38 பேரை கடித்துக் குதறிய குரங்கு
சென்னை: தென் சென்னையில் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு குரங்கு ஒன்று 25 குழந்தைகள் உள்பட 38 பேரை கடித்துள்ளது.
தென் சென்னையில் உள்ள செம்பாக்கம் பகுதியில் சிறுவன் ஒருவன் குரங்கிற்கு சாக்லேட் மற்றும் பிஸ்கேட் அளித்துள்ளான். அந்த குரங்கிற்கு சாக்லேட்டின் இனிப்பு சுவை மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து தினமும் அந்த பகுதிக்கு சாக்லேட் சாப்பிட வந்துள்ளது.
குழந்தைகளும் குரங்கு தானே என நினைத்து சாக்லேட் அளித்து வந்துள்ளனர். தினமும் சாக்லேட் சாப்பிட்டு சாப்பிட்டு அதற்கு வேறு எந்த உணவும் பிடிக்காமல் போய்விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பசியுடன் வந்த குரங்கு சாக்லேட் கிடைக்காமல் ஆத்திரம் அடைந்தது. மக்கள் அளித்த வாழைப்பழத்தை சாப்பிட மறுத்தது.
இதையடுத்து அந்த குரங்கு 25 குழந்தைகள் உள்பட 38 பேரை கடித்துக் குதறியது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தும் சாக்லேட்டிற்கு அடிமையான அந்த குரங்கை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
ஒரு வழியாக நான்கு நாட்கள் போராடி அந்த குரங்கை பிடித்த அதிகாரிகள் அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டனர்.