தி.நகரில் விதி மீறிய கட்டடங்களை எப்படி கண்டுபிடிப்பது.. அரசுக்கு திருநாவுக்கரசர் சூப்பர் ஐடியா
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ பிடித்தது போன்று மற்ற இடகளில் விபத்து நடக்காமல் இருக்க விதி மீறிய கட்டங்களை கண்டு பிடிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: இரண்டு நாட்களாக எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஒருவழியான இன்று தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
இரண்டாவது நாளாக இன்றும் தீ கொழுந்துவிட்டு கட்டடம் எரிந்த நிலையில், தற்போது முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், இதனை பார்வையிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இடிப்பு சரியானது
சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் இல்லாமல் இருப்பது ஆறுதலாக இருக்கிறது. எரிந்த நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இந்தக் கட்டடத்தை இடிக்க முடிவெடுத்துள்ளது சரியான முடிவு.
நடவடிக்கை
எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெருமளவில் கூடும் இந்த இடத்தில் உள்ள மற்றக் கட்டடங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். விதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ முகாம்
கரும் புகையால் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உரிய இடவசதி செய்துத் தரப்பட வேண்டும். திருமண மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்துத் தரப்பட வேண்டும். மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மருந்து, உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வல்லுநர் குழு
விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு இந்தப் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் விதிமுறைகள் மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் என்று தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.