தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்; விபத்தில் முதலிடம்- "ஷாக்" அடிக்கும் ஆய்வு
சென்னை: இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்திலும், தற்கொலையில் 2 ஆவது இடத்திலும் இருப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இதன் சார்பில் அனைத்து மாநில காவல் துறைகளில் இருந்தும் குற்றங்கள் மற்றும் இறப்புகள் குறித்த விவரங்கள் திரட்டி அறிக்கையாக வெளியிடப்படுகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் ஏற்பட்ட விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 52 பேர்:
இந்த ஆய்வு அறிக்கையின்படி கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு விபத்துகளின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 52 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை எண்ணிக்கை:
கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களில் 89 ஆயிரத்து 129 பேர் ஆண்கள். 42 ஆயிரத்து 521 பேர் பெண்கள். 16 பேர் திருநங்கைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பெண்களில் 20 ஆயிரத்து 148 பேர் குடும்பத் தலைவிகள் ஆவார்கள்.
கடன் தான் முதல் காரணம்:
தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததற்கான முக்கிய காரணமாக குடும்பப் பிரச்சினைகள், உடல்நிலை என்று கூறப்பட்டாலும் கடன் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மகராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் 16 ஆயிரத்து 307 பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.
2வது இடத்தில் தமிழ்நாடு:
அதற்கு அடுத்தபடியாக 16 ஆயிரத்து 122 எண்ணிக்கையுடன் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 12.2 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
சென்னைக்கு முதலிடம்:
இந்தியாவிலேயே நகரங்களில் அதிகமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை வைத்துப் பார்க்கும் போது, சென்னை நகர் தான் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில் 2 ஆயிரத்து 214 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்கள்.
77,000 பேர் காயம்:
விபத்துகள் மூலம் இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் எடுத்த கணக்கின் அடிப்படையில், மொத்தம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 805 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 69 ஆயிரத்து 95 விபத்துகள் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 77 ஆயிரத்து 756 பேர் காயமடைந்துள்ளனர்.
சாலை விபத்துகளில் உபி பர்ஸ்ட்:
இந்தியாவிலேயே அதிகளவு எண்ணிக்கையிலான விபத்துகள் நடைபெற்றுள்ள மாநிலங்களின் அடிப்படையில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்று பட்டியல் தரும் அதிர்ச்சித் தகவல். ஆனால் அதே சமயம், சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 20 ஆயிரத்து 653 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு 18 ஆயிரத்து 574 பேர் இறந்துள்ளனர்.
விபத்துக்களில் 3ம் இடம்:
அடுத்தபடியாக 3 ஆவது இடத்தில் தமிழ்நாடு வருகிறது. இங்கு நடந்த விபத்துகளில் 14 ஆயிரத்து 476 ஆண்களும், 2 ஆயிரத்து 547 பெண்களும் என ஆக மொத்தம் 17 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.