கார்ட்டூனிஸ்ட் பாலா மீது மேலும் ஒரு வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை!
திருநெல்வேலியில் நடைபெற்ற கந்துவட்டி கொடுமை சம்பவத்திற்கு அரசை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பாலா மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: கந்துவட்டி கொடுமைக்கு நடவடிக்கை எடுக்காத அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். இண்டு குழந்தைகளும் தீயில் கருகியதை பார்த்து தமிழக மக்கள் கொந்தளித்துப் போயினர். ஆட்சியர் அலுவலகத்திலேயே நடந்த இந்த தற்கொலை சம்பவம் பல கேள்விகளை எழுப்பின.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக லைன்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்தி வரும் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்திருந்தார். அரசையும், அதிகாரிகளையும் கடுமையாக சாடும் இந்த கேலிச் சித்திரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் பாலாவை நெல்லை போலீசார் கைது செய்தனர்.

லேப்டாப் பறிமுதல்
சென்னை போரூரில் உள்ள வீட்டில் இருந்து திடீரென பாலா போலீசாரால் அழைத்து செல்லப்பட்டதோடு, அவர் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று பாலாவின் மனைவி தெரிவித்திருந்தார்.

ஜாமினில் விடுதலை
பாலாவின் கைதுக்கு பத்திரிக்கைத் துறையினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசை விமர்சித்து பாலா வரைந்த கார்ட்டூன் தேசிய அளவில் செய்தியானது. இதனிடையே பாலா நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று விடுதலையாகியுள்ளார்.

திருவல்லிக்கேணி போலீஸ் வழக்கு
இந்நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாலாவிற்கு ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் அரசின் செயலைக் கண்டித்து சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதில் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது, அரசை அவமதிக்கும் விதமான சர்ச்சைக்குரிய பாதைகைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அபராதம் செலுத்த வேண்டும்
கார்ட்டூனிஸ்ட் பாலா மட்டுமின்றி சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தை சேர்ந்த பாரதி தமிழன், அசதுல்லா உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மூலம் தண்டனை கிடைக்காது என்றாலும் அபராதம் மட்டுமே செலுத்தும் வகையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்படுவது ஊடகவியலாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications