சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிறது பயோ டாய்லெட்... சேலம் கோட்ட மேலாளர் தகவல்
கோவை: சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயோ டாய்லெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்காடு ரயிலில் கழிப்பறைகள் தூய்மைப்படுத்துவது மற்றும் சீரமைக்கும் பணி வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும். ரயிலில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. எனவே, சேரன் எக்ஸ்பிரஸில் பயோ டாய்லெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ரூ.7 கோடி கோவை ஜங்ஷன் நிலையத்தை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றில் ரூ.6 கோடி நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி(லிப்ட்) அமைப்பதற்கு செலவிடப்படுகிறது. ரூ.1 கோடி ரயில் நிலையத்தில் உள்ள மற்ற பணிகளுக்கு செலவிடப்படுகிறது. லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் புத்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும். மேலும் மேற்கூரைகள் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை ரயில் நிலைய பகுதிகள், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தூய்மையாக வைத்திருக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலைய பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுமக்களின் உதவியும் அவசியம் என்று அவர் கூறினார்.