சர்ச் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர்.. கண்டித்து கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் சவ ஊர்வலத்தின்போது சென்னை அமைந்தகரையில் சர்ச் மீதும், போதகரின் கார் மீதும் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இன்று கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கு வியாழக்கிழமை மாலை நடந்தது. அப்போது ஊர்வலமாக சென்ற ஒரு கும்பல் சென்னை அமைந்தகரையில் உள்ள இந்தியன் அப்போஸ்தலிக் மிஷன் தேவாலயம் மீது கற்களை வீசியது. மேலும் அந்த தேவலாயத்தின் போதகரின் காரையும் அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து அமைந்தகரையில் உள்ள அப்போஸ் தலிக் மிஷன் தேவாலயம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போதகர் நாசர் தலைமை தாங்கினார்.
இதில் ஐ.சி.ஐ. பிரதம பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட பல திருச்சபை போதகர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரத்தில் பேராயர் எஸ்றா சற்குணம் பேசுகையில், கிறிஸ்தவர்களுக்கு ஜெபம் செய்ய மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது. ஏசு சொன்னது போல ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பி காட்டு என்ற வேத வாக்கியத்தின்படி நாங்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மன்னித்து விடுகிறோம். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.