உழவன் விரைவு ரயில் தூய்மையாகுமா?: லோக்சபாவில் கேட்ட தஞ்சாவூர் எம்.பி
தஞ்சாவூர்: உழவன் விரைவு ரயிலை தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் தஞ்சாவூர் தொகுதி எம்.பி. கு. பரசுராமன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தஞ்சாவூர் தொகுதி லோக்சபா அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
லோக்சபாவில் கேள்வி நேரத்தில் உறுப்பினர் பரசுராமன் பேசுகையில், சென்னை - தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் விடப்பட்ட நாள் முதல் மிகப் பழைமையான பெட்டிகளை இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
இதில், இரண்டாம் வகுப்பில் பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை மிகவும் மோசமாக இருக்கிறது. கழிப்பறையில் தண்ணீர் வருவதில்லை, இதேபோல, ஜன்னல் கம்பிகளும் துருபிடித்து, திரைச்சீலைகள் கிழிந்தும், அழுக்கு நிறைந்ததாகவும் உள்ளது. எலி, கரப்பான் போன்ற பூச்சி தொல்லைகளும் இருக்கின்றன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு வழிபட பல நாடுகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவதற்கு உழவன் விரைவு ரயிலை பன்படுத்துகின்றனர். எனவே, உழவன் விரைவு ரயிலை தூய்மைப்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமில்லாமல், ராமேஸ்வரம், மன்னை விரைவு ரயில்களிலும் கழிப்பறை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. மேலும், கடந்த 50 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்துக்கு விரைவில் ஆய்வுகள் மேற்கொண்டு இதே உழவன் விரைவு ரயிலின் சேவையை நீட்டிக்க வேண்டும்.என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.