ராசி எண் 2ஐ நம்பும் ஜெ.: ஆர்.கே.நகரில் மீண்டும் களமிறங்குகிறார்
சென்னை : சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
திரைப்பட நடிகையாக இருந்த ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டார். 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா, ஜானகி தலைமையில் அதிமுகவினர் தனித்தனியாக பிரிந்தனர்.
1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி தனித்துப் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது. அந்த தேர்தலில் அவர் போடி நாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பர்கூர் – காங்கேயம்
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மரணமடைந்த சூழ்நிலையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று 1991 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாகவும் 2வது முறையாக எம்.எல்.ஏவாகவும் பதவியேற்றார்.
1996ல் பர்கூரில் தோல்வி
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார்.
நான்கு வேட்பு மனுக்கள்
2001 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 132 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் அவர் நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவே தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆண்டிபட்டியில் 2முறை
ஆண்டிபட்டி 2002ம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா 3வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 4வது முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
ஸ்ரீரங்கத்தில் போட்டி
ஸ்ரீரங்கத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்று 5வது முறையாக தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றதை அடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார் ஜெயலலிதா.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. கடந்த 2015ம் ஆண்டு இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 6 வதுமுறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டி
2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதன் மூலம் இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் களம் காண்கிறார் ஜெயலலிதா. தென் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்.
ராசி எண் 2
விடுதலையான நாள் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, மே, 11ல், ஜெயலலிதா விடுதலையானார்; அந்த தேதியின் கூட்டு எண் இரண்டு. இதையடுத்து, மீண்டும் எம்.எல்.ஏ.வாக, அவர் ஆர்.கே.நகரை தேர்வு செய்தார். அந்த தொகுதியின் எண், 11.இதன் கூட்டுத் தொகை இரண்டு. சட்டசபைத் தேர்தலில் அதே ராசி எண் 2ன் அடிப்படையில் ஆர்.கே.நகரை தேர்வு செய்துள்ளார் ஜெயலலிதா.
ஏகாதசி திதி
திதிகளில் ஏகாதசி திதி 11வது திதியாகும். இது பகவான் விஷ்ணுவுக்கு உகந்தது. விஷ்ணு பக்தையான ஜெயலலிதா ஏகாதசி தினமான இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.