அரசினர் தோட்டம் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை- தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
சென்னை: புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
இம்மருத்துவமனை அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்டு விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணமில்லா சிகிச்சை:
பல்வேறு நோய்களுக்கும் ஏழை எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிறப்பு சிகிச்சை பெறும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபைக் கட்டடம்தான் உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தீர்மானம்:
இந்த மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
பன்னோக்கு உயர் மருத்துவமனை:
அதன்படி, இந்த கட்டடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக 32 கோடியே 90 லட்சம் ரூபாயும், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவக் கருவிகள் வாங்க 110 கோடியே 24 லட்சம் ரூபாயும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
ஓமாந்தூரார் தோட்டம்:
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்புப் பிரிவுகளை கொண்டுள்ளது.
தரைத்தள அமைப்பு:
400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் 2 அறுவை அரங்குகள், முதல் தளத்தில் 2, ஐந்தாவது தளத்தில் 6 மற்றும் ஆறாவது தளத்தில் 4 என மொத்தம் 14 அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாய்தளப்பாதை:
நோயாளிகள் பயன்பாட்டிற்காக, தரைத் தளத்திலிருந்து 6வது தளம் வரை, சாய் தளப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 300 கழிப்பறைகள் தவிர, கூடுதலாக 212 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
கூடுதல் தடுப்பு வசதி:
இங்குள்ள 17 மின்தூக்கிகள், படுக்கையுடன் கூடிய நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் உள் நோயாளர் பிரிவு, மயக்க நிலை மீள் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளுக்கு கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காணொலிக்காட்சி மூலம் தொடக்கம்:
இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.