திமுக, பிற கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க ஜி.கே. வாசனை தமிழக காங். தலைவராக்க முடிவு?
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த துவங்கிவிட்டன. நீண்டகாலமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தற்போது அதில் இல்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, மதிமுக ஆகிய கட்சிகள் தயாராகிவிட்டன.
ஆனால் காங்கிரஸோ தேர்தல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸால் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன் 2வது முறையாக அறிவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகளின் பட்டியலும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. கட்சியில் கோஷ்டி பூசல் குறைந்திருந்தாலும் வளர்ச்சியைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வாக்கு உள்ள ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிப்பது கட்சிக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தற்போதுள்ள சூழலில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை கட்சியின் மாநில தலைவர் ஆக்கினால் எதிர்ப்பு எதுவும் கிளம்பாது, அவரும் அனைவரையும் அனுசரித்து செல்வார் என்று கட்சி மேலிடம் நினைக்கிறதாம்.
வாசன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனால் திமுக மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்றும், பிற கட்சிகளும் நம்பி வந்து கூட்டணி வைக்கும் என்றும் கட்சி மேலிடம் நம்புகிறதாம்.
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவராக ஜி.கே. வாசன் விரைவில் நியமிக்கப்படலாம் என்று டெல்லியில் பேசப்படுகிறது.