ரசிகர்கள் விசில் பறக்க- 144 தடை நீக்கத்துக்குப் பின் படு 'மகிழ்ச்சி'யாக தூத்துக்குடிக்கு வந்த ரஜினி!
144 தடை நீக்கத்துக்குப் பின் படு மகிழ்ச்சியாக தூத்துக்குடிக்கு வந்தார் ரஜினி.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி 100 நாட்கள் போராட்டகளமாக இருந்தது... மே 22-ல் போர்க்களமாக இருந்தது.. அரசு அடக்குமுறையால் மயானபூமியாக மாறிப் போனது.. ஆனாலும் அரசியல் தலைவர்கள் வந்தார்கள் போனார்கள்.. வழக்கு போட்டார்கள்.. கைதானார்கள்.. சிறைக்கு போனார்கள்..
இவர்களைப் போல அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள துணிவில்லாமல் இப்போது 144 தடை உத்தரவு வாபஸ் பெற்ற பின்னர் 2 நாட்கள் சாவகாசமாக இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு சென்று திரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த். ஒரு துயரவு வீட்டுக்குப் போகிறோம் என்பதைப் போல ஒரு நிமிட ரஜினியின் நிகழ்வும் இல்லை.
உற்சாக கையசைப்பு
ரஜினிகாந்தின் ரசிகர்கள் விசில் பறக்க மருத்துவமனைக்கு வரவேற்கிறார்கள். ஏதோ தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவர் போல காரில் மேல் ஏறி நின்று ரசிகர்களுக்கு கை அசைக்கிறார்.
பல்லைக்காட்டி நலம் விசாரிப்பு
இதைவிட பெரிய கொடுமை.. மருத்துவமனையில் குண்டடிபட்டு குண்டாந்தடிகளால் குத்தி கிழிக்கப்பட்ட நிலையில் மரண படுக்கையில் படுத்து கிடப்போரிடம் முகம் முழுவதும் சிரிப்பை வெளிப்படுத்தியபடி நலம் விசாரித்ததுதான். இன்று இருக்கிறோம்.. நாளை உயிர் இருக்குமா? என தெரியாத நிலையில் மரண முகட்டில் போராடுகிறவர்களிடம் பல்லைக் காட்டிக் கொண்டு ரஜினிகாந்த் நலம் விசாரிப்பதாக சொன்னது அப்பட்டமான நாடகமாகத்தான் உணரப்பட்டது.
இழவு பூமியில் 'மகிழ்ச்சி'யா?
இதே மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் வந்தார்கள்.. ஆட்சியர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் முகத்தில் ஒரு வித இறுக்கம், பரிவு, துயரம் இருந்தது. அரசுதான் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.. அமைச்சர் பெருமக்கள் வந்து போனார்கள்.. ஆனால் இழவு பூமியில் புன்னகைக்க எவருக்குமே இல்லாத துணிவு ரஜினிகாந்துக்கு மட்டுமே இருக்கிறது.
அரசின் குரல்தானா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் வருகையும் அவரது நடவடிக்கையும் நிச்சயமாக விளம்பரத்துக்கான ஒன்றாகத்தான் தெரிந்ததே தவிர உள்ளார்ந்த ஒன்றாகவும் இல்லை. சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினார்கள்; நீதிமன்றத்தின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என அபத்தமாக பேசியது எல்லாமே 'அரசின்' குரலாகவே பார்க்கவும்படுகிறது.