'வழக்கொழிந்த' சமஸ்கிருத திணிப்பை கைவிடுக- மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
சென்னை: வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இந்தி திணிப்பு
மத்திய பாஜக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மத்திய அமைச்சகங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டுமென்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

தற்போது சமஸ்கிருதம் திணிப்பு
தற்போது நாடு முழுவதுமுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. ஆகியவை ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாட வேண்டும்; பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தவும், வளர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

வழக்கொழிந்த சமஸ்கிருதம்
மேலும் இந்த சுற்றறிக்கையில் சமஸ்கிருதம் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்றும் மாநில அரசாங்கங்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதற்கு கீழ் உள்ள நிலைகளிலும் சமஸ்கிருத வாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன. இது வழக்கொழிந்த மொழியை இதர அனைத்து மொழிகள் பேசும் மக்கள் மீது திணிக்கிற முயற்சியாகும். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்புகிற ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்க இந்திய நாடு முழுவதும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான ஏற்பாடே இந்த நடவடிக்கை.

மக்களை பிளவுபடுத்துகிறது
விலைவாசி உயர்வு, பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய பாஜக அரசாங்கம் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களை பிளவுபடுத்தக் கூடிய கூட்டாட்சித் தத்துவத்தை பாதிக்கிற இதர மொழி பேசும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்கிறது.

கலாசார தாக்குதல்
இந்தியாவில் வழக்கில் இருக்கும் இதர மொழிகள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும் இது. மொழியின் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் மீதான தாக்குதலே.

கண்டனம்
இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசாங்கம் கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications