நீட் கொடுங்கரத்திற்கு பலியான அரியலூர் அனிதா... 2017ன் மறக்க முடியாத துயரம்!
நீட் தேர்வால் மருத்துவ கனவு நொறுங்கிப் போனதை ஏற்க முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் 2017ல் மறக்க முடியாத துயரமாக அமைந்துவிட்டது.
Recommended Video
சென்னை : 2017ம் ஆண்டில் நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு நிறைவேறாத துக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் மரணம் இந்த ஆண்டு யாராலும் மறக்க முடியாத பெரும் துயரம்.
அரியலூர் மாணவி அனிதா உள்ளூர் முதல் உலகத் தமிழர் வரை அனைவரின் மனதிலும், நினைவிலும் இடம்பிடித்தவர். தங்கள் வீட்டு மகளாக, தங்கையாகவே அனைவரும் அனிதாவை நினைத்தனர். வெளிஉலகம் அறியாத பிஞ்சு முகம், மழலை பேச்சு என்று அனிதா தன்னுடைய டாக்டர் கனவு பற்றி சொன்ன வார்த்தைகள் அனைவரின் மனதையும் உலுக்கியது.
குழுமூரைச் சேர்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் வைரமான மகள் தான் அனிதா. ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த ஒருவர் அதுவும் பெண் குழந்தை, உயர் கல்வி படிப்பது என்பது நமது கல்வி கட்டமைப்பில் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டுவரும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் என்றால் அவர்கள் நிலைமையை சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்து எழுந்து வந்தவர்தான் அனிதா.
அனிதா சாதனை
அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பில் 478 மதிப்பெண்களைப் பெற்றார் அனிதா. அதிக மதிப்பெண் பெற்ற அனிதாவிற்கு தனியார் பள்ளி ஒன்று +1, +2 படிப்பை தங்கள் செலவிலேயே விடுதியில் தங்கி படிக்க அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை அனிதா ஏற்க என்ன காரணம் தெரியுமா? தங்கள் வீட்டில் கழிப்பறை இல்லாததால் விடுதியில் தங்கி படிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
அனிதாவின் கனவை நொறுக்கிய நீட்
தாயின் அரவணைப்பு இல்லை, தடபுடல் வசதி வாய்ப்புகள் கிடையாது என்றாலும் டாக்டர், ஐஏஎஸ் கனவை மனதில் சுமந்து கொண்டு படித்த அனிதா பிளஸ் 2வில் ஆயிரத்து 176 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தார். ஆனால் அவர் தலையில் இடியாக வந்து இறங்கிய விஷயம் தான் நீட் தேர்வு.
உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் மனம் தளராமல் நீட் தேர்வுக்காக படித்து தேர்வும் எழுதினார், ஆனால் அவருக்கு இதில் குறைந்த மதிப்பெண்ணே கிடைத்ததால் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டமும் நடத்திப் பார்த்தார் அனிதா. ஆனால் உச்சநீதிமன்றமும் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
உயிரை விட்ட அனிதா
இதனையடுத்து வேளாண் படிப்பில் சேரத் தயாரான மாணவி அனிதா திடீரென செப்டம்பர் மாதம் 1ம் தேதி தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். மருத்துவம் படிக்க சீட் கிடைக்காத விரக்தியில் மனதில் புழுங்கிப் புழுங்கிறேயே அனிதா உயிரை விட்டுவிட்டார் என்று அவரது தந்தை சண்முகம் கண்ணீர் வடித்தார்.
அனிதா வித்திட்ட போராட்டங்கள்
அரியலூர் மாவட்ட மக்களின் செல்ல மகளான அனிதாவின் மரணம், உலகம் முழுவதும் அனைவர் மனதிலும் துக்கத்தை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று அனைவரும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஒரு மாதத்திற்குப் பின் போராட்டங்கள் ஓய்ந்து விட்டன.
சகோதரருக்கு அரசுப்பணி
அரசின் நிதியுதவிகளை புறக்கணித்த அனிதாவின் குடும்பத்தினருடன் சமாதான பேச்சு நடத்திய அரசு, ஒருவழியாக அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் அரசுப் பணி ரூ. 7 லட்சம் நிதியுதவி என்று விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் அனிதாவிற்கான நீதி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. 2017ல் மறக்க முடியாத துயரத்தில் ஒன்றாக அமைந்துவிட்டது மாணவி அனிதாவின் மரணம்.