தண்ணீர் இல்லாம செத்தோம், இப்ப மழை வந்தும் சாவுறோம்... கதறும் காவிரி டெல்டா விவசாயிகள்!
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
நாகப்பட்டினம்: வடகிழக்குப் பருவமழை தொடக்கம் முதலே நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் பெய்து வருவதால் பயிரிடப்பட்டு 15 நாட்களே ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ஊடகங்கள் எல்லாவற்றிலும் சென்னை வெள்ளம் குறித்த செய்திகளை 24 மணி நேரமாக ஒளிபரப்பி வரும் நிலையில், எங்க நிலைமையையும் கொஞ்சம் கவனீங்கன்னு கதறுகிறார்கள் டெல்டா விவசாயிகள். மழைக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு, கடந்த 5 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையை வரவேற்கும்படியாக இல்லை.
"தண்ணியில்லாமல் வரண்டு கிடந்தோம்.. கிடைச்ச கொஞ்ச தண்ணிய வச்சு பயிர் வெச்சோம் ஆனா இப்ப மழை கொட்டி எல்லாம் மூழ்கிப்போச்சு.. கடன்மேல் கடன் வாங்கி இப்ப அதுவும் மூழ்கிக்கிடக்கது" என்று கதறுகிறார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்.
சம்பா பயிர்களுக்கு ஆபத்து
விவசாயிகள் சொல்லும் இன்னொரு தகவல் மேலும் அதிர்ச்சி தருகிறது. வழக்கத்திற்கு மாறாக, மிக காலதாமதமாக சம்பா சாகுபடி தொடங்கியதாவும், நெல் நாத்து நடப்பு முடிந்து தற்போது 15 நாட்கள் மட்டுமே முடிந்துள்ளதாகவும், இதனால், 4 நாட்கள் நீரில் மூழ்கினால் முழுவதும் அழுகிவிடும் என்கிறார்கள். "நாத்து பிடுங்கி நட்டவுடனே மழை கொட்டுது.. வயலில் தேங்கிக் கிடக்கும் வெள்ள நீர் உடனே வெளியேறாவிட்டால் பயிர் அழுகிவிடும்" என்கிறார் ராஜேந்திரன்.
வெள்ளம் வடிந்த பின்னர் கணக்கெடுப்பு
டெல்டா மாவட்டமான நாகையில் மட்டும், தமிழக வேளாண் துறையின் தரவுகளின்படி, சுமார் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசினோம். "விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது உண்மைதான், ஆனால், மூழ்கியுள்ள அனைத்தும் சேதமடைந்துவிடாது. வெள்ளம் வடிந்த பிறகு, மீண்டும் நெற்பயிர் முளைவிடும், தப்பித்துக்கொள்ளும், அதனால், வெள்ளம் வடிந்தபிறகு சேதம் எவ்வளவு என கணக்கிடுவோம்" என்றார .
கடனில் தத்தளிக்கும் விவசாயிகள்
சேதமதிப்பு கணக்கிட்ட பிறகு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் வேளாண் துறை அதிகாரிகள். ஆனால், ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், வேளாண் கூலி தொழிலாளர்களும் உரிய நிவாரணத்தை அரசு தருமா என்ற சந்தேகம் உள்ளது.
அரசுக்கு சவாலாக உள்ளது
சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் நேரில் சென்று பார்வையிட்டார்கள், ஆனால், தவிக்கும் எங்களை பார்க்க முன்வரவில்லை என்று விவசாயிகளின் பிரதிநிதிகள் பொங்குகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு இந்த பருவமழை கடும் சவாலாக திகழ்கிறது. சமாளிக்குமா அரசு!!?