50 நாளாகிப் போச்சு.. விட்டு விலகிருச்சா "கருப்பு".. மோடி சொன்ன நல்ல காலம் பொறந்துருச்சா?
பண மதிப்பு நீக்கம் செய்து 50 நாட்கள் ஆகிவிட்டன. மோடி சொன்னது போல் கறுப்புப் பணம் ஒழிந்தா என்றால் இல்லை.
சென்னை: மோடி சொன்ன கெடு முடிந்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்த 50 நாட்களில் என்னென்ன நடந்துள்ளது? என்னென்ன நடக்கவில்லை? ஒரு அலசல்...
கடந்த மாதம் 9ம் தேதி நள்ளிரவில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த அடுத்த வினாடியில் இருந்து இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தது போன்ற உணர்வை மக்கள் அடைந்தார்கள்.
பழைய நோட்டுக்களை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் காத்திருந்த மக்கள் இன்று வரை வங்கியின் வாசல்களிலேயே காத்துக்கிடக்கின்றனர். பணத்தை மாற்றுவதற்காக நின்றவர்களில் சுமார் 100 பேர் இதுவரை இந்தியா முழுவதும் மரணம் அடைந்துள்ளனர்.
50 நாட்கள் கெடு
இதனிடையே இந்திய மக்கள் 50 நாட்களுக்கு பொருத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் எல்லாம் அதன் பிறகு நீங்கும் என்று ஒரு குடுகுடுப்பைக்காரன் சொல்வது போல் பிரதமர் மோடி சொன்னார். இது ஒரு புறம் இருக்க, பண மதிப்பு நீக்க அறிவிப்பு, முதலில் கறுப்பு பணம் ஒழிக்க என்றவர்கள், பின்னர், கள்ள நோட்டு ஒழிக்க என்றார்கள். பின்னர், ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மக்களைக் குழப்பிக் கொண்டே இருந்தது மத்திய அரசு, சரி.. இந்த 50 நாட்களில் உண்மையில் கறுப்புப் பணம் ஒழிந்ததா? கள்ளப் பணம் இல்லாமல் போனதா?
கள்ள நோட்டு ஒழிந்ததா?
மோடியின் இந்த அறிவிப்பால் 500 மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். இதைச் சுற்றிலும் உருவாக்கப்பட்டிருந்த கள்ளச் சந்தை பெரிய அளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் முற்றிலுமாக கள்ள நோட்டுக்களை ஒழிக்க முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 2000 ரூபாய் புதிய நோட்டு அச்சடித்து வெளிவந்த மறுநாளே 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து பிடிபட்டதையும் நாம் பார்த்தோம். எனவே, இது கள்ள நோட்டுக்களை முற்றிலும் ஒழிக்காது என்பதுதான் நிதர்சனம்.
தீவிரவாதம் நிலை என்ன?
பண மதிப்பு நீக்க அறிவிப்பை அடுத்து தீவிரவாதச் செயல்பாடு சற்று குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை நீக்குவதால் தீவிரவாதம் எந்த விதத்திலும் குறைந்துவிடாது என்றும் மறுபுறம் கூறப்படுகிறது. எனிலும், போதைப் பொருள் கடத்தல் செய்யும் மாஃப்பியா கும்பலுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தட்டுப்பட்டு ஏற்பட்டுள்ளதால் கடத்தல் தொழில் சற்று தடுமாறியுள்ளதாக தெரிகிறது. அவ்வளவுதான்.
கறுப்புப் பணம்
கறுப்புப் பணம் ஒழிப்பு என்பதுதான் இதில் பிரதானமாக பேசப்பட்டது. சிறிய அளவில் கணக்கில் காட்டாத பணம் மட்டுமே சிக்கியது. ஆனால் பெரிய அளவில் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் சிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் பணத்தை ரொக்கமாக இந்தியாவில் வைத்திருக்கவில்லை. மாறாக கடல் தாண்டி வெளிநாடுகளில் வைத்திருக்கிறார்கள். இதனால் கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் ஒன்றும் ஒழிந்துவிடவில்லை.
தள்ளாடும் பொருளாதாரம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்தது. இவை அனைத்தும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பின்னர், மதிப்பிழந்து போனது. 2000 ரூபாய் புதிய நோட்டுக்கள் புழக்கத்திற்கு வர காலதாமதமானது. இதனால் வங்கிகளிலும் மக்கள் கையிலும் பணத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகள் பெற்றுள்ள நிலையில் வெறும் 6.5 லட்சம் கோடி ரூபாய்தான் புதிய நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. இது பெரிய அளவில் பொருளாதாரத்தை நசிக்கியுள்ளது.
இன்னமும் மூடிக் கிடக்கும் ஏடிஎம்கள்
ஏடிஎம் மையங்கள் இன்னமும் திறக்கப்பாமல் மூடியே கிடக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வேலை செய்கிறது. அதிலும் பணம் இருப்பதில்லை. மீதி ஏடிஎம்கள் சுத்தமாக வேலை செய்யவே இல்லை. ஏடிஎம் மையங்கள் அனைத்தும் முழுமையாக செயல்பட இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்படும் கிராமங்கள்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நகர மக்களிடம் அழுத்தம் கொடுத்து நிறைவேற்றலாம். ஆனால் கிராமப்புறங்களில் எப்படி இதனை அமல் செய்வது. செல்போன்கள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் பல உள்ளன. அதே போன்று பலர் வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கின்றனர். அவர் எல்லா பணப்பரிவர்த்தனைகளையும் ரொக்கமாகவே செய்து வருகின்றனர். இவர்களுக்கு கூலி கொடுப்பதற்கு கூட சில்லறை ரூபாய் நோட்டுக்கள் இல்லாமல் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சம்பளத்திற்கே வழியில்லை
இந்த 50 நாட்களில் ஊழியர்கள் சம்பளம் பெறுவது பெரும் பாடாக உள்ளது. 560 மில்லியன் மக்கள் இந்தியாவில் பணியில் உள்ளவர்கள். இவர்களில் 10 சதவீதம் பேர் மட்டும்தான் அமைப்பு சார்ந்த பணியில் இருப்பவர்கள். மற்ற 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். இவர்கள் சம்பளம் பெறுவதற்கு இன்று வரை கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.