மழை ஓய்ந்தது.. கொசுக்கள் அட்டகாசம் ஆரம்பம்.. மக்களைத் தெறிக்க விடும் "டெங்கு"
சென்னை: சென்னையில் மழை நின்று விட்ட நிலையிலும் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
டெங்கு பாதிப்பு காரணமாக இதுவரை 44 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது கவலை தரும் விஷயமாக மாறியுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை இந்த முறை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டது. குறிப்பாக சென்னையும், அதன் புறநகர்ப் பகுதிகளும் ஆடிப் போய் விட்டன. நீரில் மூழ்கிப் போய் விட்டன. இன்னும் கூட பல பகுதிகள் மீண்டு வர முடியாமல் தத்தளிக்கின்றன.

மழை நீருடன் கழிவு நீரும்
அரும்பாக்கம், நெற்குன்றம், புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்.எம்.டி.ஏ.காலனி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர்புரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் கழிவு நீரோடு கலந்தது. இதனை அகற்றுவதற்கு மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குடிசைகளில் சாக்கடை நீர்
இருப்பினும் பெரும்பாலான குடிசை பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் மழை நீர் வடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. அவற்றுடன் சாக்கடை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது.

கொசு உற்பத்தி
தேங்கிய மழை நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகி வருகின்றன. படு வேகமாக நடந்து வருகிறது இது. இதனால் கொசுக்கடியைத் தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன.

நோயாளிகள் அதிகரிப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அரசு சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 910 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 682 பேர் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 724 பேர் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

44 பேருக்கு டெங்கு பாதிப்பு
இதில், 3 மருத்துவமனைகளிலும் சாதாரண காய்ச்சலுக்காக ஒரு நாளைக்கு 72 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 28 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 16 பேரும் என 44 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மலேரியா, டைபாய்டும்
இதேபோல மலேரியா, டைபாய்டு, நிமோனியா ஆகியவையும் ஏற்பட்டு அதனாலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார்
மருத்துவமனைகளிலும் பலர் சேர்ந்துள்ளனர்.

மருந்தடிக்க வேண்டும்
வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு மருந்து அடிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தப் பணி இதுவரை எங்குமே முழுமையாக செய்யப்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications