தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக.. "வரலாறு" படைப்பாரா சபாநாயகர் தனபால்?
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை சந்திக்க போகும் முதல் சபாநாயகர் என்ற பெருமை தனபாலுக்குக் கிடைக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை: தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு தற்போது நடக்கப் போகிறது. அது, சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் என்ற சூழல். இதுவரை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி அரசு சமீபத்தில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தது. அதில் பெரும் கலவரத்துக்கு மத்தியில் பெரும்பான்மையை நிரூபித்துத் தப்பினர். தற்போது அடுத்து ஒரு தீர்மானத்தை சந்திக்கவுள்ளது சட்டசபை. இது சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமாகும்.
இதற்கு முன்பு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில்லை. ஆனால் அப்படி நடந்தால் தனபால் அந்த வரலாறுக்கு உரியவர் ஆவார்.
இதுவரை இல்லாத நிகழ்வு
தமிழக சட்டசபையில் இதுவரை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதுவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில்லை. ஒவ்வொரு சபாநாயகரும் ஒரு முத்திரையுடன் பணியாற்றியுள்ளனர். ஆனால் தற்போதைய சபாநாயகர் தனபாலுக்குத்தான் எதிர்க்கட்சியினரின் ஒருமித்த எதிர்ப்பு கிடைத்துள்ளது.
சேடபட்டி முத்தையாவுக்கு எதிராக
கடந்த1991-96 காலகட்டத்தில் சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா இருந்தபோது அவருக்கு எதிராக திமுக தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை முன்மொழிய போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லாத காரணத்தால் அது ஏற்கப்படவில்லை. எனவே அது விவாதத்திற்கே வரவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் கோரிய ரகசிய வாக்கெடுப்பை நடத்த மறுத்து விட்டார் தனபால். மேலும் திமுக உறுப்பினர்களை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டார். அதேசமயம், திமுக உறுப்பினர்களும் சபாநாயகரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அவரது சட்டை, கையைப் பிடித்தும் இழுத்தனர். சபாநாயகர் இருக்கையும் தள்ளி விடப்பட்டது. அவரது இருக்கையிலும் திமுக உறுப்பினர்களும் அமர்ந்தனர்.
என்ன நடக்கும்?
நம்பிக்கை இல்லாத் தீர்மான நோட்டீஸை வழங்க 34 உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தால் போதும். எனவே திமுகவின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் செல்லுபடியாகும். சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியிலிருந்து நீக்குவதற்காக சட்டசபை விதியின்படி, தனித் தீர்மானம் கொடுக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை கொண்டு வரும் எம்.எல்.ஏ. அதை எழுத்து மூலமாக, தீர்மான வரைவுடன் சட்டசபை செயலாளரிடம் தர வேண்டும். அதன் நகலை சபாநாயகருக்கும் கொடுக்க வேண்டும்.
14 நாட்களுக்கு முன்பு
சட்டசபை கூடுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு இந்தத் தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 14 நாட்கள் முடிந்து கூட்டப்படும் முதல் கூட்ட நாளுக்கான அலுவல் பட்டியலில் இந்தத் தீர்மானம் சேர்க்கப்பட வேண்டும். சட்டசபையில் வினா விடை நேரம் முடிந்ததும் உடனடியாக அந்தத் தீர்மானம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சபாநாயகர் அந்த தனித் தீர்மானத்தைப் படித்துக் காட்ட வேண்டும். அதைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கும் எம்.எல்.ஏ.க்களை அவரவர் இடங்களில் எழுந்து நிற்க சபாநாயகர் கேட்டுக் கொள்வார்.
35க்குக் குறையாமல்
35-க்கு குறையாத எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று ஒப்புதல் அளித்தால், அந்தத் தீர்மானத்துக்கு சட்டசபையின் அனுமதி கிடைத்திருப்பதாக சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அதன் மீதான விவாதத்தை, உடனடியாகவோ அல்லது அந்தத் தீர்மானம் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களுக்கு உள்ளாகவோ ஒரு நாளில் நடத்த சட்டசபையில் நாள் குறிக்கப்பட வேண்டும்.
துணை சபாநாயகர் நடத்துவார்
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை துணை சபாநாயகர்தான் நடத்த வேண்டும். இதில் தீர்மானம் வெற்றி பெற்றால், சபாநாயகர் உடனடியாக தனது பதவியை இழப்பார். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதேசமயம், ஆட்சிக்கு ஆபத்து இருக்காது.
பெரும்பான்மை இருக்காது
அதேசமயம், சபாநாயகர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும், தீர்மானம் வெல்கிறது என்று சொன்னால் அதிமுக தரப்பிலிருந்தும் தீர்மானத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளளது என்று அர்த்தம் ஆகும் என்பதாலும் அதிமுக அரசும் பெரும்பான்மை பலத்துடன் இல்லாதது நிரூபணமாகும். எனவே அதிமுக அரசு மீண்டும் நம்பிக்கை வாக்கு கோர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
திமுக ஆட்சியில் ஒருமுறை
இதுவரை தமிழகத்தில் பதவிக்காலத்தின்போது ஒருமுறை மட்டும் சபாநாயகர் மாற்றப்பட்டுள்ளார். அவர் கே.ஏ.மதியழகன். 1972ம் ஆண்டு திமுக உடைந்து எம்.ஜி.ஆர். தனியாகப் பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தார். அப்போது சபாநாயகராக இருந்தவர் மதியழகன். கருணாநிதிக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எம்.எல்.ஏக்களைக் கூட்டி மதியழகனை நீக்கினார் கருணாநிதி. இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட்டார். அப்போதும் கூட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.