மாயமான மலேசிய விமானம் மாதிரியே 'டெட் ஜோனில்' பறந்ததா ஏர் ஏசியா விமானம்?
சென்னை: மீண்டும் ஒரு விமானம் ராடாரில் இருந்து மாயமாகியுள்ளது. முன்னதாக 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 ராடாரில் இருந்து மாயமானது. தற்போது 162 பேருடன் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் மாயமாகியுள்ளது.
ஏர் ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக வேறு வழியில் செல்ல அனுமதி கேட்கையில் மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராடார்
எம்.ஹெச். 370 விமானத்திற்கு என்ன தான் ஆனது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. விமானம் பற்றி மலேசிய அதிகாரிகள் நிச்சயம் எதையோ மறைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. விமானம் விபத்துக்குள்ளாகியது போன்று தெரியவில்லை. ஏனென்றால் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
டெட் ஜோன்
மலேசிய விமானம் மாயமானபோது அது ராடாரில் இருந்து தப்பியதாக தெரிவித்தார்கள். அது எப்படி ஒரு விமானம் ராடாரில் இருந்து மாயமாகும். விமானம் டெட் ஜோனில் பறந்தால் மட்டும் அதை கண்டுபிடிக்க முடியாது. இரண்டு ராடார்களுக்கு இடையே 200 கிலோமீட்டரில் உள்ள இடத்தில் விமானம் பறப்பதையே டெட் ஜோன் என்கிறார்கள். டெட் ஜோனில் விமானத்தை சுட்டு வீழ்த்துவதும் கடினம்.
தீவிரவாதிகள்
எம்.ஹெச். 370 விவகாரத்தில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் விமானத்தை சுட்டு வீழ்த்துவது தீவிரவாதிகளுக்கு சாதனை போன்றதாகும். அவ்வாறு அவர்கள் மலேசிய விமானத்தை வீழ்த்தியிருந்தால் உடனே அதற்கு பொறுப்பேற்று இருந்திருப்பார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
சீனர்கள்
மலேசிய விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். சீனர்கள் தான் குறி என்றால் விமானத்தை திபெத்தியர்கள் அல்லது உய்குர்கள் தாக்கியிருக்கலாம். ஆனால் இது போன்ற தாக்குதலில் நம்பிக்கை இல்லாதவர்கள் திபெத்தியர்கள். உய்குர்கள் தாக்கியிருந்தால் இந்நேரம் அதற்கு பொறுப்பேற்றிருந்திருப்பார்கள்.
தேடல்
விமானம் பெருங்கடலில் விழுந்துவிட்டால் அதை மீட்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். விமானம் விழுந்த இடம் சரியாகத் தெரிந்திருந்தால் கூட அதை கண்டுபிடித்து பாகங்களை மீட்பது கடினம். மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக பலர் நம்புகிறார்கள்.
ஏர் பிரான்ஸ்
2009ம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இருந்து 228 பேருடன் பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகருக்கு சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்ததில் அதில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானம் விழுந்த இடம் தெரிந்த போதிலும் அதன் முதல் பாகத்தை மீட்க 6 நாட்கள் ஆனது. விமானத்தின் மொத்த பாகங்களையும் மீட்க 9 மாதங்கள் ஆகின. இதன் மூலம் கடலில் விழுந்த விமானத்தை மீட்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.
மலேசிய விமான விவகாரத்தில் அது எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை. இந்நிலையில் அதன் பாகங்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது நடக்காத காரியம்.