அரசியலை விட்டே ஒதுங்குங்கள்... நடவடிக்கை பாயும்.. தினகரன் தூதுவரை எச்சரித்த எடப்பாடி
அரசியலைவிட்டு ஒதுங்காவிட்டால் நடவடிக்கைகள் பாயும் என தினகரனின் தூதுவரை எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்ததாக கூறப்படுகிறது.
சென்னை: அரசியலைவிட்டு ஒதுங்கிப் போய்விடுங்கள்.. அமைதியாக இருக்கும் என்னை நடவடிக்கை எடுக்க வைக்காதீங்க என தினகரனின் தூதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தீவிரப்படுத்தாமல், ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி. கட்சி அலுவலகத்துக்கு மட்டுமல்ல, எந்தச் சூழலிலும் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக நான் இருக்க மாட்டேன்' என மன்னார்குடி தூதுவரிடம் விளக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த தினகரன், திகார் சிறைவாசத்துக்குப் பிறகு கட்சி தொடர்பாக அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார். தினம்தோறும் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை என எடப்பாடி அரசுக்குக் குடைச்சல் கொடுத்து வந்தார்.
கெடு விதித்த தினகரன்
அவரது இந்தச் செயலை அமைச்சர்கள் யாரும் ரசிக்கவில்லை. தாம் விதித்துள்ள கெடு ஆகஸ்ட் 5ம் தேதியோடு முடிவடைகிறது. அதன்பிறகு நடவடிக்கையைப் பாருங்கள் என அதிர வைத்தார் தினகரன்.
சரண்டர் தினகரன்
அவரது கெடுவைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் ஆகும் மனநிலையில் தூதுவர் ஒருவரை அனுப்பி வைத்திருக்கிறார் தினகரன்.
தூதுவர் பேச்சுவார்த்தை
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கிறார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர். இந்த சந்திப்பில், கட்சி அலுவலகத்துக்காவது தினகரன் வருவதற்கு நீங்கள் அனுமதியளிக்க வேண்டும். பொதுச் செயலாளரால் வழங்கப்பட்ட பதவியில்தான் அவர் நீடிக்கிறார். முழுவதுமாக அவரை ஒதுக்குவதால், மிகுந்த வேதனையில் இருக்கிறார். அவருக்கென்று இருந்த இமேஜும் சரிந்துவிட்டது எனக் கவலையோடு பேசியிருக்கிறார்.
காட்டம் காட்டிய எடப்பாடி
இதற்குப் பதில் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா குடும்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நான் மௌனமாக இருப்பது இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஓ.பி.எஸ் செல்வாக்கு குறையவில்லை என உளவுத்துறை அறிக்கை சொல்கிறது. இதைச் சொல்வதற்கு உளவுத்துறை தேவையில்லை.
அரசியலை விட்டு போங்க
பொதுமக்கள் மத்தியில் உள்ள கோபத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இந்தக் குடும்பத்துக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட நான் கிள்ளிப் போடவில்லை. ஆதரவாகவும் செயல்படவில்லை. தினகரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் நான் எடுக்கவில்லை. இப்போதே அரசியலில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வது நல்லது. அவர்கள் ஒதுங்கியிருந்தால், பிரதமரிடம் பேசி அவர்கள் குடும்பத்தின் மீதான நடவடிக்கைகளில் இருந்து தீர்வைக் கொடுக்க முடியும். அதைவிடுத்து, கெடு விதிப்பது, எம்.எல்.ஏக்களை வளைப்பது என என்னை மிரட்டும் வேலையில் அவர்கள் ஈடுபடுவதால், அவர்களுக்குத்தான் சிக்கல் வரும். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கள் போதும் எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டார்.
நடவடிக்கை பாயும்
இந்தப் பதிலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ எதிர்பார்க்கவில்லை. முதல்வரை எடப்பாடியை சமாதானப்படுத்த மீண்டும் அவர் முயற்சித்தார். ஆனால் எடப்பாடியாரோ, என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறி, அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
தினகரன் கொந்தளிப்பு
டெல்லி கொடுக்கும் தைரியத்தில், நமக்கு எதிராகச் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் எவ்வளவு காலத்துக்கு டெல்லி அவர்களைக் காப்பாற்றப் போகிறது எனப் பார்க்கிறேன். எங்களுக்கும் நேரம் வரும். ஆட்சி கையில் இருப்பதால் ஆடுகிறார். பார்த்துக் கொள்வோம் எனக் கொதித்திருக்கிறார் தினகரன்.